டெல்லி தேர்தல் 2025: படுதோல்விக்கு வழிவகுத்த அரவிந்த் கெஜ்ரிவாலின் 5 தவறுகள்!
AAP Chief Arvind Kejriwal in Delhi election 2025: ஆம் ஆத்மி கட்சி 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவி ஆட்சியை இழந்துள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின் அக்கட்சி ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. 27 வருட இடைவெளிக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வேட்பாளரிடம் படுதோல்வி அடைந்துள்ளார். மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர், பாஜகவுக்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமான பிரச்சாரத்தை நடத்தினார். காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்தார். இருந்தாலும், கெஜ்ரிவால் தோல்வி அடையக் காரணமாக இருந்தவை என்னென்ன என்பதைத் இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Arvind Kejriwal
ஊழல் குற்றச்சாட்டுகளில் ராஜினாமா:
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, செப்டம்பர் 2024 இல் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். "நான் அக்னி பரிட்சைக்குத் தயாராக இருக்கிறேன்" என்று கூறி ராஜினாமா செய்த அவர், மக்கள் தங்கள் தீர்ப்பை அறிவிக்கும் வரை நான் முதல்வர் பதவி நாற்காலியில் அமர மாட்டேன் என்று கூறியிருந்தார்.
சிறையில் இருந்தபோதும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த கெஜ்ரிவால், வழக்கு விசாரணையின் நெருக்கடிகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் இறுதியில் தனது பதவியைக் கைவிட்டார். மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், கேஜ்ரிவால் உட்பட கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் பலர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். கெஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Arvind Kejriwal
அதிகப்படியான எதிர்மறை பிரச்சாரம்
கெஜ்ரிவால் தனது ஆட்சியில் டெல்லியின் அரசுப் பள்ளிகளை மாற்றியமைத்ததற்காகவும், அவரது மொஹல்லா மருத்துவமனைகள் மூலம் ஏழைகளுக்கு மலிவான மருத்துவ சேவையை வழங்கியதற்காகவும் புகழ்பெற்றார். 2020 தேர்தல்களில், கெஜ்ரிவால் அதற்கான பலனை அறுவடை செய்தார்.
இருப்பினும், இந்த முறை ஆம் ஆத்மியின் பிரச்சாரம் பாஜக தலைமை மற்றும் காங்கிரஸ் மீதான தாக்குதல்களை மையமாகக் கொண்டிருந்தது. பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ஆம் ஆத்மியின் உயர்மட்டத் தலைவர்கள் வளர்ச்சியை முன்னிருந்தி பிரச்சாரம் செய்தவதில் குறைவாகவே கவனம் செலுத்தினர்.
Arvind Kejriwal
இனப்படுகொலை குற்றச்சாட்டு
பிரச்சாரத்தின் நடுவில், பாஜக தலைமையிலான ஹரியானா அரசு டெல்லி மக்களைக் கொல்ல யமுனா நீரில் விஷம் கலந்ததாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுகள் டெல்லி தேர்தல் பிரச்சாரத்திற்கு மோசமான திருப்பத்தை ஏற்படுத்தின. பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டும் கெஜ்ரிவாலுக்கு எதிராக பதிலடி கொடுக்க ஆரம்பித்தன. இறுதியில், டெல்லி மக்கள் கெஜ்ரிவாலுக்கு பாடம் கற்பித்துள்ளனர்.
Arvind Kejriwal
தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் இல்லை:
அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் அறிக்கை மூலம் நடுத்தர வர்க்கத்தை கவர முயன்றார். மற்ற அரசியல் கட்சிகள் மக்களை ஏடிஎம் போல நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இருப்பினும், கெஜ்ரிவாலின் அறிக்கையில் அவர் ஆட்சிக்கு வந்தால் நடுத்தர வர்க்கத்தினருக்கு என்ன செய்வார் என்று குறிப்பிடப்படவில்லை.
ஆனால், மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசிடமிருந்து ஏழு கோரிக்கைகளை வைப்பதாக மட்டும் கூறியிருந்தார். இறுதியில், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி தொடர்பான சலுகைகள் ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கைகளை விட டெல்லி வாக்காளர்களை அதிகம் கவர்ந்தன.
Arvind Kejriwal
அரசியலில் தொடரும் மோதல் போக்கு:
மோதல் ஆரம்பத்திலிருந்தே கெஜ்ரிவாலின் அரசியலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்த முறையும் அதில் மாற்றம் இல்லை. தனது பிரச்சாரத்தின் போது, கெஜ்ரிவால் டெல்லி காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடினார்.
தேர்தல் செயல்முறையை சீர்குலைக்கவும், ஆம் ஆத்மி பிரச்சாரத்தைத் தடுக்கவும் தேர்தல் ஆணையமும் டெல்லி காவல்துறையும் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்ததாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை குறிவைத்து விமர்சித்தார். மேலும், கெஜ்ரிவாலும் ராகுல் காந்தியும் ஒருவருக்கொருவர் இடைவிடாத தாக்குதல்களை நடத்தினர்.