நாங்க(பாஜக) விவசாயிகளின் நண்பேன்டா..! மேற்கு வங்கத்தில் விவசாயி வீட்டில் தரையில் அமர்ந்து உணவு உண்ட அமித் ஷா
மேற்கு வங்கத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் விவசாயி ஒருவரது வீட்டில் தரையில் அமர்ந்து உணவு உண்டார் அமித் ஷா. அமித் ஷாவின் இந்த செயல் தேசியளவில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், அந்த புகைப்படங்கள் செம வைரலாகிவருகின்றன.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 2 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க அல்லது ஆட்சியில் அங்கம் வகிக்க பாஜக தீவிரமாக உள்ளது. அந்தவகையில், இந்த 2 மாநிலங்களிலுமே பாஜக தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக, மேற்கு வங்கத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று சென்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவருக்கு கொல்கத்தாவில் பாஜக தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பளித்தனர்.
பின்னர் கொல்கத்தாவின் வடக்கு பகுதியிலுள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் வழிபாடு நடத்திய அமித் ஷா, அதன்பின்னர் சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து மேதினிப்பூர் பகுதியில் நடந்த பேரணியில் கலந்துகொள்ள சென்ற அமித் ஷா, செல்லும் வழியில் பாலிஜூரி என்ற கிராமத்தில், அந்த ஊரை சேர்ந்த சனதன் சிங் என்ற விவசாயி வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார்.
பிரதமர் மோடி அரசால் கொண்டுவரப்படும் வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு எதிரானவை என்று எதிர்க்கட்சிகளும் ஒருசில மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், விவசாயிகளுக்கு உற்ற நண்பன் என்ற பிம்பத்தை கட்டமைக்கும் விதமாக விவசாயியின் வீட்டில் தரையில் அமர்ந்து உணவு உட்கொண்டார் அமித் ஷா.
அமித் ஷாவுடன், பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, பாஜக தேசிய துணைத்தலைவர் முகுல் ராய் மற்றும் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் ஆகியோரும் மதிய உணவு சேர்ந்து சாப்பிட்டனர்.
பின்னர் அமித் ஷா அந்த விவசாயியின் குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அமித் ஷாவின் இந்த செயல் தேசியளவில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், அந்த புகைப்படங்களும் செம வைரலாகிவருகின்றன.