விமான விபத்து நடந்த இடத்தில் 800 கிராம் தங்கம்! மீட்டெடுத்த ராஜு படேல்!
ஏர் இந்தியா விமான விபத்தில் ராஜு படேல் மற்றும் அவரது குழுவினர் துரிதமாகச் செயல்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களுக்கு உதவி செய்ததுடன், பயணிகளின் உடைமைகளையும் மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
அகமதாபாத் விமான விபத்து
கடந்த ஜூன் 12 அன்று, பி.ஜே. மருத்துவக் கல்லூரி அருகே ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளான சில நிமிடங்களிலேயே, 56 வயதான ராஜு படேல், துரிதமாகச் செயல்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். புகை மண்டலமும், தீப்பிழம்புகளும் விமானத்தின் சிதைவுகளை சூழ்ந்திருந்தபோது, ஐந்து நிமிடங்களுக்குள் விபத்து நடந்த இடத்திற்கு தனது குழுவினருடன் விரைந்து சென்றார்.
மீட்புப் பணியில் ராஜு படேல்
"ஆரம்பத்தில் தீ அவ்வளவு உக்கிரமாக இருந்தது, கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு எங்களால் நெருங்கவே முடியவில்லை” என்று படேல் நினைவுகூர்ந்தார். தீயணைப்பு படை மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்தவுடன், அவரும் அவரது குழுவும் காயமடைந்தவர்களுக்கு உதவ களமிறங்கினர்.
ஸ்ட்ரெச்சர்கள் இல்லாததால், சேலை மற்றும் பெட்ஷீட்களைப் பயன்படுத்தி உயிர் பிழைத்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசென்றனர். மீட்புப் பணிகள் இரவு 9 மணி வரை நடைபெற்ற நிலையில், ராஜு படேலின் குழுவினர் தொடர்ந்து உதவி செய்ய அதிகாரிகளும் அனுமதித்தனர்.
மீட்கப்பட்ட உடைமைகள்
அவசர சேவைகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததும், படேலின் குழு சிதைவுகளில் இருந்து பயணிகளின் உடைமைகளை மீட்பதில் கவனம் செலுத்தியது. கருகிய சிதைவுகளுக்கு மத்தியில், அவர்கள் 800 கிராமுக்கு மேல் தங்க நகைகள், ரூ.80,000 ரொக்கம், பல பாஸ்போர்ட்கள் மற்றும் ஒரு பகவத் கீதை புத்தகம் ஆகியவற்றைக் கண்டெடுத்தனர். இவை அனைத்தையும் அவர்கள் உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, மீட்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
மறக்கமுடியாத பேரழிவு
"எங்களால் ஏதேனும் ஒரு வகையில் உதவ முடிந்தது குறித்து நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்தோம்" என்று அவர் அடக்கமாகக் கூறுகிறார்.
2008ஆம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள் உட்பட, பல நெருக்கடி காலங்களில் இதேபோல உதவி செய்திருக்கிறார் ராஜு படேல். "அப்போது, குண்டு வெடித்தபோது நான் மருத்துவமனையிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் தான் இருந்தேன். ஆனால் இம்முறை ஏற்பட்ட பேரழிவு என்றென்றும் மறக்கவே முடியாது" என்கிறார் ராஜு.
ராஜு படேல் மற்றும் அவரது குழுவினரின் இந்த தன்னலமற்ற மனிதாபிமான செயல், சமூகத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.