தாறுமாறாக உயர்ந்த ஆதார் அப்டேட் கட்டணம்! கைரேகை பதிவுக்கு ரூ.125 கட்டணம்!
ஆதார் ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை திருத்தங்களுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது, இது அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. பெயர், முகவரி போன்ற விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளைப் புதுப்பிப்பதற்கான செலவு அதிகரிக்கும்.

ஆதார் அட்டையில் திருத்தங்கள்
ஆதார் ஆணையம் (UIDAI), ஆதார் அட்டையில் திருத்தங்கள் மற்றும் புதுப்பித்தல்களுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த திருத்தப்பட்ட கட்டண அமைப்பு அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், ஆதார் அட்டைதாரர்களுக்கு விவரங்களை மாற்றுவதற்கான செலவு அதிகரித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் செப்டம்பர் 30, 2028 வரை நடைமுறையில் இருக்கும்.
ஆதார் புதுப்பித்தல் கட்டணம் உயர்வு
ஆதார் மையங்களில் பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் இ-மெயில் போன்ற விவரங்களை மாற்றுவதற்கான கட்டணம், முன்னர் இருந்த ரூ. 50-ல் இருந்து ரூ. 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை பயோமெட்ரிக் அப்டேட்டுடன் சேர்த்து செய்தால், கூடுதல் கட்டணம் இல்லை.
பயோமெட்ரிக் அப்டேட் கட்டணம்
கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் பயோமெட்ரிக் தரவுகளை புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ. 100-ல் இருந்து ரூ. 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அடையாளச் சான்று (PoI) மற்றும் முகவரிச் சான்று (PoA) ஆவணங்களை ஆதார் மையங்களில் புதுப்பிப்பதற்கான கட்டணமும் ரூ. 50-ல் இருந்து ரூ. 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
e-KYC அல்லது பிற வழிகளில் ஆதார் பிரிண்ட் அவுட் எடுப்பதற்கான கட்டணம் ரூ. 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது கட்டத்தில் ரூ. 50 ஆக உயரும்.
குழந்தைகளுக்கு சலுகை
குழந்தைகளுக்குரிய முதல் கட்டாயப் பயோமெட்ரிக் அப்டேட் (5-7 வயது மற்றும் 15-17 வயது) தொடர்ந்து இலவசமாகவே இருக்கும். 7 முதல் 15 வயது வரையிலான சிறார்களின் பயோமெட்ரிக் தரவுகளை புதுப்பிக்கும் கட்டணம் ரூ. 125 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 30, 2026 வரை மட்டுமே.
'myAadhaar' போர்ட்டல் மூலமாக அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களைப் புதுப்பிப்பது ஜூன் 14, 2026 வரை இலவசமாக இருக்கும்.
வீட்டிற்கே வந்து அப்டேட் செய்யும் வசதி
ஆதார் மையத்திற்கு வர இயலாதவர்களுக்காக, வீட்டிற்கே வந்து ஆதார் பதிவு அல்லது புதுப்பித்தல் செய்யும் சேவைக்கு ரூ. 700 (ஜி.எஸ்.டி. உட்பட) வசூலிக்கப்படும். அதே முகவரியில் கூடுதல் நபர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தினால், ஒவ்வொருவருக்கும் ரூ. 350 வசூலிக்கப்படும்.
இந்தக் கட்டணங்கள் அக்டோபர் 2028-ல் மீண்டும் ஒருமுறை மறுஆய்வு செய்யப்படும் என்று UIDAI தெரிவித்துள்ளது.