பீச்சில் ரொமன்ஸ்! பாறை இடுக்கில் விழுந்த காதலி! அப்படியே தவிக்கவிட்டு சென்ற காதலன்! இறுதியில் நடந்தது என்ன?
காதல் ஜோடி கடற்கரையில் தனிமையில் பாறைகளின் மேல் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது தவறி பாறைகளுக்கு இடையே விழுந்த காதலியை காப்பாற்றாமல் காதலன் அப்படியே விட்டு சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அப்பிக்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பனிந்திரா. இவர் மச்சிலி பட்டணம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதல் விவகாரம் இருவீட்டார் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 29ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனால், மகளை காணவில்லை என்று பதறிப்போன பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய காதலி காதலன் பனிந்திரா தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் காதலன் பனிந்திரா காதலியை அழைத்துக்கொண்டு அப்பிக்கொண்டா கடற்கரைக்கு சென்றனர். அந்த கடற்கரையில் உயரமான பாறைகளின் மீது அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது சீறிப்பாய்ந்த ராட்சத அலைகளால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் பாறைகளின் நடுவே வெளியே வரமுடியாமல் வசமாக சிக்கிக்கொண்டார். பொழுது சாய்ந்ததாலும் அலைகள் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்ததால் அவர் எங்கே இருக்கிறார் என்பது பனிந்திராவுக்கு தெரியவில்லை. இதனால் பயந்து போன பனிந்திரா தனது காதலியை அங்கேயே விட்டுவிட்டு பயத்தில் கிளம்பி சென்றுவிட்டார். பாறை இடுக்கில் சிக்கிய இளம்பெண் விடிய விடிய கத்தி அலறி கூச்சலிட்ட படியே இருந்தார்.
அதிகாலை நேரத்தில் மீன் பிடிக்க மீனவர்கள் வந்த போது இளம்பெண்ணின் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது பாறையின் இடுக்கில் சிக்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை ஒருவழியாக போராடி படுகாயங்களுடன் மீட்டனர். பின்னர் இதுகுறித்து மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காதலன் பனிந்திரா தள்ளிவிட்டதால் இந்த சம்பவம் நடைபெற்றதா என்பது குறித்து அந்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.