அடக்கடவுளே.. காசுக்காக இப்படி கூடவா செய்வாங்க.. ஊசி போட்டு இதயத்தை துடிக்க வைத்த மருத்துவமனை? பகீர் தகவல்.!
ஓசூர் அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள அலசநத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன். இவரது மகள் பூஜா ஸ்ரீ(17). அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி காய்ச்சல் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பூஜா ஸ்ரீ அனுமதிக்கப்பட்டார்.
மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை காரணமாக மாணவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் நேற்று மாலை திடீரென அவரது உடல்நிலை மோசடைந்துள்ளதாகவும், கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டதால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், வென்டிலேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் மூலம் வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், முந்தைய மருத்துவமனையில் இதயத்தை துடிக்க வைக்க ஊசி போடப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகள் உயிரிழப்பு மருத்துவர்களின் தவறாக சிகிச்சையே காரணம் என்று கூறி போராட்டத்தில் ஈடுட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.
இதனையடுத்து, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் ஒசூர் தனியார் மருத்துவமனை மீது பல்வேறு புகார்கள் இருந்து வருவது குறிப்பித்தக்கது.