டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மிகவும் கடினம்: கட்-ஆஃப் குறைய வாய்ப்பு!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு கடினம் என தேர்வர்கள் கருத்து. தமிழ் கேள்விகள் சவால். கட்-ஆஃப் குறைய வாய்ப்பு. 3,935 இடங்களுக்கு 11 லட்சம் பேர் போட்டி.

மாநிலம் முழுவதும் நடைபெற்ற குரூப் 4 தேர்வு
இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு இன்று (ஜூலை 13, 2025) தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சுமார் 13 லட்சம் பேர் இத்தேர்வினை எழுத விருப்பம் தெரிவித்திருந்தனர். மொத்தம் 4,922 மையங்களில் பலத்த பாதுகாப்புடன், அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் தேர்வு அமைதியாக நடந்தது. சென்னையில் மட்டும் 316 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது.
கட்டுப்பாடுகளுடன் கூடிய தேர்வுமுறை
கைப்பேசி, பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச் போன்ற மின்னணுக் கருவிகள் அல்லது தடை செய்யப்பட்ட பொருட்களைத் தேர்வு மையங்களுக்கு எடுத்து வரக்கூடாது என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய பொருட்களை வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடுகள் தேர்வை நேர்மையாக நடத்த உதவும் என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடினம் Vs எளிது: தேர்வர்கள் மற்றும் நிபுணர்கள் கருத்து
தேர்வு கடினமாக இருந்ததாகச் சில தேர்வர்களும், எளிமையாக இருந்தது என்றும், சற்று ஆழ்ந்து சிந்தித்து எழுதக்கூடிய கேள்விகள் அதிகம் இருந்ததாகவும் சில தேர்வர்களும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு சற்று கடினமாகவே இருந்ததாக நிபுணர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக, தமிழ் மற்றும் பொது அறிவு கேள்விகள் நீளமாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர். இத்தேர்வில், "விடியல் பயணம் திட்டம்" உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பான கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.
போட்டி மற்றும் கட்-ஆஃப் குறித்த எதிர்பார்ப்புகள்
குரூப் 4 தேர்வின் முடிவுகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். மொத்தம் 13,89,738 பேர் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், 2,41,719 பேர் தேர்வை எழுதவில்லை. ஆக, 11,48,019 பேர் (82.61 சதவீதம்) தேர்வை ஆர்வமுடன் எழுதியுள்ளனர். இதன் மூலம், காலியாக உள்ள 3,935 இடங்களுக்கு 11,48,019 பேர் போட்டியிடுகிறார்கள். அதாவது ஒரு இடத்துக்கு 292 பேர் போட்டியிடுகின்றனர்.
தேர்வர்களின் கருத்து
இது குறித்து தேர்வர் பெரிய நாயகம் கூறும்போது, "தமிழ்ப் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது. கணிதம் மிகவும் எளிதாக இருந்தது, பொது அறிவு நடுநிலையாக இருந்தது. இந்த முறை தேர்வு கடினமாக இருந்ததால் கட்-ஆஃப் குறைய வாய்ப்புள்ளது" என்றார்.
தேர்வர்களின் கருத்து
மற்றொரு தேர்வர் தளவாய் கூறும்போது, "இல்லம் தேடி கல்வி, விடியல் பயணம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் பற்றி கேள்வி வந்துள்ளது. தமிழ் ரொம்ப கடினம். பத்தாம் வகுப்பு தரத்திலான கேள்விகளுக்கு பதிலாக டிகிரி தரத்தில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது" என்றார். தேர்வர்களின் கருத்துக்களையும் நிபுணர்களின் மதிப்பீடுகளையும் பார்க்கும்போது, இம்முறை கட்-ஆஃப் சற்று குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.