- Home
- Career
- Govt Scholarship:அப்பாடி.! மாதம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகையா? விண்ணப்பித்து பெறுவது எப்படி தெரியுமா?
Govt Scholarship:அப்பாடி.! மாதம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகையா? விண்ணப்பித்து பெறுவது எப்படி தெரியுமா?
தமிழ்நாடு அரசு, வரலாற்று ஆய்வாளர்களுக்கு மாதம் ரூ.50,000 உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ள அரிய ஆவணங்களை ஆய்வு செய்து, தமிழக வரலாற்றின் புதிய கோணங்களை வெளிக்கொணர்வதே இதன் நோக்கம்.

மாதம் ரூ.50,000 உதவித்தொகை.!
தமிழ்நாட்டு வரலாற்றை புதிய கோணத்தில் வெளிச்சத்துக்குக் கொண்டு வர மாநில அரசு அறிவித்துள்ள புதிய ஆய்வு உதவித்தொகை திட்டம் கல்வியாளர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் உள்ள அரிய வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்ய தயாராக இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு, ஒரு ஆண்டுக்காலம் மாதம் ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக தமிழக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளத.
வரலாறு முக்கியம் அமைச்சரே.!
1909 முதல் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆவணக் காப்பகம், தமிழின் நிர்வாக, சமூக மற்றும் கலாச்சார வரலாற்றைக் காட்டும் ஆயிரக்கணக்கான ஆவணங்களை பாதுகாத்து வருகிறது. 17ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரை உருவான விலைமதிப்பற்ற அரசு ஆவணங்கள், பழைய பதிவுகள், கணக்குத் தாள்கள், நிர்வாக ஒப்பந்தங்கள் போன்றவை அனைத்தும் இங்கு பாதுகாப்பாக உள்ளன. இந்த நெடுங்கால வரலாற்று செல்வத்தை ஆய்வு செய்து, இதுவரை வெளியாகாத உண்மைகள், சமூக மாற்றங்கள், அரசியல் பரிமாற்றங்கள் போன்றவை பற்றிய புதிய ஆராய்ச்சி விளக்கங்களைப் பெறுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
தனிநபர் ஆராய்ச்சியாளர்கள் இதில் பங்கேற்கலாம்.!
மீளுருவாக்கம் செய்யப்பட்ட தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 15 ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தகுதியான முதுகலை பட்டதாரிகள் மற்றும் தனிநபர் ஆராய்ச்சியாளர்கள் இதில் பங்கேற்கலாம். ஆய்வு மேற்கொள்ளத் தேவையான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகள், தகுதி விவரங்கள், விண்ணப்ப படிவங்கள் ஆகியவை தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tamilnaduarchives.tn.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளன.
விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி நவம்பர் 28, 2025 என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் வரலாறு, பண்பாடு மற்றும் அரசியல் வளர்ச்சியை புதிய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் பொன்மிகு வாய்ப்பாக இந்த உதவித்தொகை கருதப்படுகிறது. அதனால், ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அரசு அழைப்பு விடுத்துள்ளது.