- Home
- Career
- கவர்ன்மென்ட் வேலைனு நம்பி ஏமாறாதீங்க! சென்னை உட்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு!
கவர்ன்மென்ட் வேலைனு நம்பி ஏமாறாதீங்க! சென்னை உட்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு!
மத்திய அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, வேலையற்ற இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்த மோசடி கும்பல் தொடர்பாக அமலாக்கத்துறை நாடு தழுவிய சோதனையை மேற்கொண்டுள்ளது.

ரயில்வே வேலை மோசடி
மத்திய அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, வேலையற்ற இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்த விவகாரத்தில், அமலாக்கத்துறை (ED) நாடு தழுவிய அளவில் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை முதல் தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம், கேரளா, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் மொத்தம் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர். அமலாக்கத்துறையின் பாட்னா மண்டல அலுவலகம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
15 இடங்களில் சோதனை
தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு இடத்தில் சோதனை நடைபெற்றது. கேரளாவில் எர்ணாகுளம், பந்தளம், அடூர் மற்றும் கோடூர் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
பீகார் (முசாபர்பூர், மோதிஹாரி), மேற்கு வங்கம் (கொல்கத்தா), குஜராத் (ராஜ்கோட்), மற்றும் உத்தரப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களிலும் ரெய்டு நடந்தது.
மோசடி கும்பலின் நூதன முறை
இந்த மோசடி கும்பல் மிகவும் திட்டமிட்டு செயல்பட்டுள்ளது. விசாரணையின்போது, இவர்களது செயல்பாடுகள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரம்பத்தில் இந்திய ரயில்வேயில் வேலை தருவதாகத் தொடங்கிய இந்த மோசடி, பின்னர் வனத்துறை, வருமான வரித்துறை, அஞ்சல் துறை, பொதுப்பணித்துறை (PWD) மற்றும் டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) என 40-க்கும் மேற்பட்ட அரசு அமைப்புகளின் பெயரில் விரிவடைந்துள்ளது.
அரசுத் துறைகளின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகளைப் போன்றே போலி ஐடிகளை உருவாக்கி, அதன் மூலம் பணி நியமனக் கடிதங்களை அனுப்பி இளைஞர்களை நம்ப வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணி நியமனக் கடிதம் கொடுத்து, அவர்கள் வேலையில் சேர்ந்துவிட்டது போன்ற பிம்பத்தை உருவாக்க, 2 முதல் 3 மாதங்களுக்குச் சம்பளம் வழங்கியுள்ளனர். இதனால் இளைஞர்கள் இது உண்மையான வேலைதான் என்று முழுமையாக நம்பி ஏமாந்துள்ளனர்.
ரயில்வே பாதுகாப்புப் படை (RPF), டிக்கெட் பரிசோதகர் (TTE) மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற பதவிகளில் இவர்கள் போலிப் பணி நியமனம் செய்துள்ளனர்.
விசாரணையின் பின்னணி
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. ஏமாற்றப்பட்ட இளைஞர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் எங்கே சென்றது? இதில் உள்ள முக்கிய நபர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் ஆவணங்களையும் டிஜிட்டல் சாதனங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசு வேலை தொடர்பான தகவல்களை அந்தந்த துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இடைத்தரகர்களை நம்பிப் பணம் கொடுக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

