- Home
- Career
- 8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்? பென்ஷன் ரூ.57,000 வரை உயருமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் பலன் என்ன?
8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்? பென்ஷன் ரூ.57,000 வரை உயருமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் பலன் என்ன?
8வது சம்பள கமிஷன் தொடர்பான முக்கிய கருத்துக்கேட்பு கூட்டம் சென்னையில் தொடங்கியது. பழைய ஓய்வூதிய திட்டம், பென்ஷன் உயர்வு தொடர்பான எதிர்பார்ப்புகள் என்ன? ஓய்வூதியம் எவ்வளவு உயர வாய்ப்பு உள்ளது என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஒன்றுகூடிய மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் 8வது சம்பள கமிஷன் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் சென்னையில் செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளன. சம்பள உயர்வு மட்டுமின்றி ஓய்வூதியம் மற்றும் பல்வேறு கொடுப்பனவுகள் குறித்த கோரிக்கைகளும் இதில் முன்வைக்கப்பட உள்ளன.
சென்னையில் முக்கிய ஆலோசனை
8வது சம்பள கமிஷன் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பயணம் செய்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கருத்துகளை பெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஊதிய மாற்றம், ஓய்வூதிய கணக்கீடு, கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பங்கேற்பாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளன.
இந்த குழு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆலோசனைகளை நடத்த திட்டமிட்டுள்ளது. ஜெய்ப்பூர், சென்னை, புதுச்சேரி, சண்டிகர், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்கள் இந்த கருத்துக்கேட்பு பயணத்தில் இடம்பெற்றுள்ளன.
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வருமா?
மத்திய அரசு ஊழியர்களிடையே மிகவும் முக்கியமாக பேசப்படும் கோரிக்கைகளில் ஒன்று பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பானது. ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதிய வருமானம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்வைத்து, பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோருக்கு கடைசியாக பெற்ற சம்பளத்தின் குறிப்பிட்ட சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு பென்ஷன் வழங்கப்படுகிறது. தற்போது உள்ள 50 சதவீத அளவை அதிகரித்து 67 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஆலோசனைகளில் முக்கிய இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்மென்ட் ஃபேக்டர் அதிகரித்தால் என்ன நடக்கும்?
8வது சம்பள கமிஷனில் பிட்மென்ட் ஃபேக்டர் எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்பது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பில் முக்கியமானதாக உள்ளது. 2.15, 2.28 அல்லது 2.57 போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீடு செய்யப்பட்டால், பல்வேறு ஊதிய நிலைகளில் உள்ள ஊழியர்களின் ஓய்வூதியத் தொகை கணிசமாக அதிகரிக்கக்கூடும்.
உதாரணமாக, தற்போதைய கணக்கீட்டுடன் ஒப்பிடும்போது லெவல் 4 ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் சுமார் ரூ.27,413 முதல் ரூ.32,768 வரை செல்லக்கூடும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. லெவல் 5 பிரிவில் ரூ.31,390 முதல் ரூ.37,522 வரையிலும், லெவல் 6 பிரிவில் ரூ.38,055 முதல் ரூ.45,489 வரையிலும் உயர வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதேபோல், லெவல் 7 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தற்போதைய ரூ.22,450 என்ற அளவிலிருந்து ரூ.48,268 முதல் ரூ.57,697 வரை ஓய்வூதியம் கிடைக்கக்கூடும் என கணிப்புகள் கூறுகின்றன.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை
எனினும், இந்தத் தொகைகள் அனைத்தும் தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ முடிவுகள் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வெவ்வேறு பிட்மென்ட் ஃபேக்டர்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளின் அடிப்படையிலான மதிப்பீடுகள் மட்டுமே இவை.
8வது சம்பள கமிஷன் தனது பரிந்துரைகளை சமர்ப்பித்த பின்னரும், அதனை மத்திய அரசு பரிசீலித்து இறுதி முடிவை எடுக்க வேண்டும். எனவே, தற்போதைய நிலையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கப்போகும் சரியான உயர்வு குறித்து உறுதியாக கூற முடியாது. இருப்பினும் சென்னையில் தொடங்கும் கருத்துக்கேட்பு கூட்டம், எதிர்கால சம்பளம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்கள் தொடர்பான முக்கிய விவாதங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

