வைஃபை மூலம் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை; மத்திய அரசு எச்சரிக்கை
பொது வைஃபை நெட்வொர்க்குகள் ஹேக்கர்களுக்கு எளிதான இலக்குகளாக இருப்பதால், தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைப் பாதுகாக்க பொது வைஃபை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அரசு எச்சரிக்கிறது. டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, CERT-In 'ஜாக்ரூக்தா திவாஸ்' விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நினைவூட்டலை வெளியிட்டுள்ளது.

Free Wi-fi
விமான நிலையங்கள், காபி கடைகள் அல்லது பொது இடங்களில் இலவச வைஃபை கிடைப்பது யாருக்குத்தான் பிடிக்காது? இது ஒரு வசதியான வழியாகத் தோன்றினாலும், பொது வைஃபை பயன்படுத்துவது உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களை கடுமையான ஆபத்தில் ஆழ்த்தக்கூடும். அரசாங்கம் இதுபற்றி ஒரு வலுவான எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் மக்கள் தங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க நிதி பரிவர்த்தனைகள் போன்ற முக்கியமான நடவடிக்கைகளுக்கு வைஃபை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது.
Jaagrookta Diwas
பொது வைஃபை நெட்வொர்க்குகள் பெரும்பாலும் சரியான பாதுகாப்பைக் கொண்டிருப்பது இல்லை. இதனால் அவை ஹேக்கர்கள் மற்றும் மோசடி கும்பலின் முக்கிய இலக்குகளாகின்றன. டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, இது குறித்த நினைவூட்டை CERT-In வெளியிட்டுள்ளது. அதன் 'ஜாக்ரூக்தா திவாஸ்' விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
Wi-Fi networks
பொது வைஃபை நெட்வொர்க்குகள் மூலம் வங்கி அல்லது ஆன்லைன் ஷாப்பிங் போன்ற முக்கியமான பரிவர்த்தனைகளை செய்வது குறித்து CERT-In எச்சரிக்கிறது. சைபர் குற்றவாளிகள் பொது வைஃபையில் பாதுகாப்பற்ற இணைப்புகளை எளிதில் இடைமறித்து, பயனர்களின் தரவுகளைத் திருடுகிறார்கள். நிதி இழப்பும் ஏற்படக்கூடும் என்று CERT-In விளக்கியுள்ளது.
CERT-In awareness drive
இலவச வைஃபை நெட்வொர்க்குகள் மூலம் பரிவர்த்தனைகள் செய்வதையோ அல்லது தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுவதையோ தவிர்க்குமாறு அரசாங்கம் மக்களை வலியுறுத்தியுள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக, CERT-In சில முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகளையும் பகிர்ந்துகொண்டுள்ளது. அறிமுகமில்லாத வழிகளில் வரும் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம், அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் நீண்ட மற்றும் வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும், முக்கியமான கோப்புகளை அடிக்கடி பேக்அப் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Public Wi-Fi risk
இந்தப் பழக்கங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க உதவும். பொது வைஃபை மூலம் மின்னஞ்சல்களைப் பார்ப்பது, சமூக ஊடகக் கணக்குகளில் நுழைவது போன்ற எளிய செயல்பாடுகள்கூட ஆபத்தானவைதான். கூடுதல் பாதுகாப்பிற்காக VPN நெட்வொர்க்கை பயன்படுத்துவதும், பிரவுசர்களில் Auto fill ஆப்ஷனை பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் பரிந்துரைக்கப்படுகிறது.
Cybersecurity
CERT-In என்பது இந்தியாவில் சைபர் பாதுகாப்பிற்குப் பொறுப்பான தேசிய நிறுவனமாகும். இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன்படி, சைபர் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் CERT-In நடவடிக்கை எடுக்கிறது. சைபர் குற்றங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பகிர்தல் முதலியவை இந்நிறுவனத்தின் பணிகளாகும்.