குட் நியூஸ்.! இனி இந்த வாகனங்களுக்கு ரோடு டாக்ஸ் இல்லை.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மோட்டார் வாகன வரி என்பது சாலைகளை பயன்படுத்தும் வசதிக்காக செலுத்தப்படும் ஈடுசெய்யும் வரி என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

வாகனத்தை சாலையில் ஓட்டும்போது 'மோட்டார் வாகன வரி' (சாலை வரி) கட்டுவது கட்டாயம். இது சாலை பராமரிப்புக்கான கட்டணம் போன்றது. ஆனால், சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வழங்கிய முக்கிய தீர்ப்பில் பொது சாலையில் இயங்காத வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி விதிக்க முடியாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் தொழிற்சாலை வளாகங்கள், தனியார் எஸ்டேட்கள், கல்லூரி/கேம்பஸ் போன்ற இடங்களில் மட்டுமே இயங்கும் வாகன உரிமையாளர்களுக்கு பெரிய நிம்மதி கிடைக்கிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர், மோட்டார் வாகன வரி என்பது "சாலைகளை பயன்படுத்தும் வசதிக்காக செலுத்தப்படும் ஈடுசெய்யும் வரி" எனக் குறிப்பிட்டனர். அதாவது, அரசின் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தினால் மட்டுமே வரி செலுத்த வேண்டும். தனியார் இடத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு அரசு வரி விதிக்க முடியாது எனவும் அவர்கள் விளக்கினர்.
இந்த தீர்ப்பு 'ஆந்திரப் பிரதேச மோட்டார் வாகன வரி சட்டம், 1963'ன் பிரிவு 3 அடிப்படையில் வழங்கப்பட்டது. அந்தச் சட்டத்தில் "பொது இடம்" என்ற சொல்லின் முக்கியத்துவத்தை நீதிபதிகள் வலியுறுத்தினர். வாகனம் பொது இடத்தில் இயக்கப்பட்டாலோ அல்லது அங்கு பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டாலோ தான் வரி விதிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது எனவும் கோர்ட் எடுத்துக்கூறியது.
இந்த வழக்கு விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளாண்ட் வளாகத்தில் இயங்கும் 'ராஷ்டிரிய இஸ்பாத் நிகாம் லிமிடெட்' (RINL) நிறுவன வாகனங்களைச் சார்ந்தது ஆகும். அந்த நிறுவனம் வைத்திருந்த 36 கனரக வாகனங்கள் பிளாண்ட் உள்ளேயுள்ள டிஸ்பாட்ச் ஓட்டலில் மட்டுமே பொருட்கள் எடுத்துச் சென்றன. பொதுமக்கள் நுழைய முடியாத, சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு அந்த வளாகத்தில் மட்டுமே வாகனங்கள் இயங்கியதால், நிறுவனம் வரி விலக்கு கேட்டது.
முதலில் உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதி நிறுவனம் சார்பாக உத்தரவு வழங்கி, ரூ.22.71 லட்சம் திருப்பித் தர உத்தரவிட்டார். ஆனால், பிரிவு பெஞ்ச் அதை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. இறுதியாக உச்சநீதிமன்றம், “வாகனம் பொது இடத்தில் இயங்கவில்லையெனில் அல்லது அங்கு பயன்படுத்தும் நோக்கில் வைக்கப்படவில்லையெனில், மோட்டார் வாகன வரி விதிக்க முடியாது” எனத் தெளிவுபடுத்தி நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.