- Home
- Business
- RBI : இந்த வங்கியில் அக்கவுண்ட் இருக்கா.. லைசென்ஸை ரத்து செய்த ரிசர்வ் வங்கி.. எந்த வங்கி? ஏன்?
RBI : இந்த வங்கியில் அக்கவுண்ட் இருக்கா.. லைசென்ஸை ரத்து செய்த ரிசர்வ் வங்கி.. எந்த வங்கி? ஏன்?
வங்கியில் பணம் வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. ஆர்பிஐ குறிப்பிட்ட ஒரு வங்கியின் உரிமத்தை திடீரென ரத்து செய்துள்ளது. இதனால் அந்த வங்கியின் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

வங்கி உரிமம் ரத்து
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மீண்டும் ஒரு கூட்டுறவு வங்கிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த வங்கியை தொடர்ந்து செயல்பட அனுமதித்தால் அது பொதுமக்களின் நலனுக்கும், வைப்புதாரர்களின் நிதி பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, வங்கி இனி புதிய டெபாசிட்களை ஏற்கவும், ஏற்கனவே உள்ள வைப்புகளை திருப்பிச் செலுத்தவும் அனுமதி இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் செயல்பட்டு வந்த சர்வோதயா கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

வங்கி மூடல்
போதிய மூலதனம் இல்லை, குறைந்த வருமான திறன் மற்றும் வங்கி ஒழுங்குமுறை சட்ட விதிகளை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மே 12, 2026 முதல் அந்த வங்கி தனது அனைத்து வங்கி சேவைகளையும் நிறுத்தியுள்ளது. மேலும் வங்கியை மூடும் நடவடிக்கையை தொடங்க மகாராஷ்டிரா கூட்டுறவு ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்க பதிவாளருக்கும் ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், அந்த வங்கியில் பணம் வைத்திருந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கெரண்டி கார்ப்பரேஷன் (DICGC) மூலம் ஒரு வைப்புதாரருக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை பாதுகாப்பு வழங்கப்படும் என ஆர்பிஐ உறுதி அளித்துள்ளது.
காப்பீட்டுத் தொகை
வங்கி அளித்த தரவுகளின்படி, சுமார் 98.36 சதவீத வாடிக்கையாளர்கள் தங்கள் முழு வைப்புத் தொகையையும் DICGC மூலம் பெற தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026 மார்ச் 31ஆம் தேதி வரை ரூ.26.72 கோடி அளவிலான காப்பீட்டுத் தொகை ஏற்கனவே வைப்புதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பெரும்பாலான சிறிய வைப்புதாரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
டெபாசிட் பாதுகாப்பு
இருப்பினும், அதிக தொகை வைத்திருந்த சிலருக்கு இந்நிலை கவலையை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளின் நிதிநிலை மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், பொதுமக்களின் பண பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் வங்கிகளில் முதலீடு செய்யும் போது மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய அவசியத்தையும் மீண்டும் நினைவூட்டியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

