- Home
- Business
- LPG Cylinder Subsidy: சிலிண்டர் விலையில் ரூ.1,000 மானியம்.. யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்!
LPG Cylinder Subsidy: சிலிண்டர் விலையில் ரூ.1,000 மானியம்.. யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்!
LPG Cylinder Subsidy: சிலிண்டர் அசல் விலை ரூ.1600 ஆக இருந்தாலும், அரசு ரூ.942-க்குத் தருவதால் பொதுமக்களுக்கு ரூ.700-ம், உஜ்வாலா பயனர்களுக்கு ரூ.1000-ம் மறைமுக மானியமாகப் பலன் கிடைக்கிறது என மத்திய அரசு விளக்கியுள்ளது. இது குறித்து பார்ப்போம்.

LPG சிலிண்டர் விலையில் ரூ.1,000 மானியம்
வீட்டு உபயோக LPG சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்ட பிறகும், வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் மறைமுக மானியம் கிடைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உஜ்வாலா திட்டம் இல்லாதவர்களுக்கு சுமார் ரூ.700 ரூபாயும், உஜ்வாலா பயனாளிகளுக்கு 1,000 ரூபாயும் மானியமாக கிடைக்கிறது என்று அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து பேசிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரவீன் மால் கனூஜா சவுதி ஒப்பந்த விலை (Saudi CP) அடிப்படையில் ஒரு 14.2 கிலோ சிலிண்டரின் உண்மையான விலை ₹1,600-க்கும் அதிகம். ஆனால், வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.942 மட்டுமே செலுத்துகிறார்கள் என்றார்.
ரூ.1,600 மதிப்புள்ள சிலிண்டர் ரூ.942 தான்
"நான் உஜ்வாலா வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ₹1,600 மதிப்புள்ள சிலிண்டரை ரூ.942-க்கு வாங்குகிறேன். இதுவே வாடிக்கையாளருக்கு ஒரு மறைமுக மானியம்தான். இதன் மேல், உஜ்வாலா வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.300 கிடைக்கிறது. ஆக, மொத்தமாக பார்த்தால் அவர்களுக்கு ரூ.1,000 மானியம் கிடைக்கிறது. உஜ்வாலா இல்லாதவர்களுக்கும் ரூ.700 கிடைக்கிறது" என்று பிரவீன் மால் கனூஜா செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளார்.
]தற்போது ஒரு 14.2 கிலோ சிலிண்டருக்கு எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு (OMCs) சுமார் ₹700 இழப்பு ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த நிதியாண்டுகளில் அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.52,000 கோடியை இழப்பீடாக வழங்கியபோதும் இதேபோன்ற நிலைதான் இருந்தது. மேற்கு ஆசியாவில் நிலவும் சூழலையும் மீறி, கச்சா எண்ணெய், எல்பிஜி மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் சீராக இருப்பதாக கனூஜா உறுதியளித்தார்.
ரூ.29 விலை உயர்வு சுமை அல்ல
உஜ்வாலா வாடிக்கையாளர்களுக்கு, ஆண்டுக்கு முதல் நான்கு சிலிண்டர்களுக்கு தலா ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது. இது அவர்களின் சராசரி ஆண்டு நுகர்வான 4-5 சிலிண்டர்களைக் கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.29 விலை உயர்வை பற்றி பேசிய கனூஜா, இது ஒரு நாளைக்கு ரூ.1 என்றும், ஒரு குடும்பத்தில் ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு 20 பைசா என்றும் கணக்கிடலாம் (ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் பயன்படுத்தும் குடும்பத்திற்கு) என்றார். ரூ.700 இழப்புடன் ஒப்பிடும்போது இது மிகச் சிறிய உயர்வு என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் குறித்து பேசிய கனூஜா, எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் மீது லிட்டருக்கு ரூ.30-ம், பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.6-ம் இழப்பு ஏற்படுவதாகக் கூறினார். இதனால் ஒட்டுமொத்த துறைக்கும் தினசரி ரூ.600 கோடி முதல் ரூ.700 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

