இனி கவலை இல்லை.. LPG சிலிண்டர் விலை குறையப் போகுது.. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!
இந்தியாவில், வீட்டு உபயோக மற்றும் வர்த்தக சிலிண்டர்களுக்கு அரசு தனித்தனியாக வரி விதிக்கிறது. வீட்டு உபயோக சிலிண்டருக்கு 5% ஜிஎஸ்டியும், வர்த்தக சிலிண்டருக்கு 18% ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு
இந்தியாவில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சமையல் எரிவாயு சிலிண்டர் குறித்த பேச்சு தான் இருந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய போர் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக நமது நாட்டில் வர்த்தக சிலிண்டர்கள் மற்றும் வீட்டு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஹோட்டல்கள் மூடப்பட்டன. உணவின் விலையும் பலமடங்கு உயர்ந்தது. நாடு முழுவதும் ஊரடங்கு போடும் நிலை உருவானது.
LPG சிலிண்டர் விலை குறையும்
இந்த நிலையில், ஈரானும், அமெரிக்காவும் இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துள்ளன. இதனால் கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், எல்பிஜி சிலிண்டர் விலை சுமார் ரூ.317 வரை குறைய வாய்ப்புள்ளது என்ற மகிழ்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சேம்பர் ஆஃப் டிரேட் அண்ட் இண்டஸ்ட்ரி (CTI) அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், சமையல் எரிவாயு மீதான வரியை நீக்கப் பரிந்துரைத்துள்ளது.
சாமானிய மக்கள் நிம்மதி
பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், சேம்பர் ஆஃப் டிரேட் அண்ட் இண்டஸ்ட்ரி ஒரு முக்கிய விஷயத்தை குறிப்பிட்டுள்ளது. ஈரான்-அமெரிக்கா போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எல்பிஜி நெருக்கடிக்கு மத்தியில், எரிவாயு மீதான வரியை முழுமையாக நீக்கினால், சாமானிய மக்கள் நிம்மதி அடைவார்கள். இது இந்திய வீடுகளில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டை எளிதாக தீர்க்கும் என்றும் அந்த கடிதத்தில் கூறியுள்ளது.
அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது?
சேம்பர் ஆஃப் டிரேட் அண்ட் இண்டஸ்ட்ரியின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, ஜிஎஸ்டியை நீக்கினால், வீட்டு உபயோக மற்றும் வர்த்தக சிலிண்டர்களின் விலை கணிசமாகக் குறையும். தற்போதைய பணவீக்க சூழலில், எரிவாயு விலை குறைந்தால் பொதுமக்களுக்கு இது பெரும் நிவாரணமாக அமையும். அரசு என்ன இறுதி முடிவு எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சிலிண்டர் விலை எவ்வளவு குறையும்?
இந்தியாவில், வீட்டு உபயோக மற்றும் வர்த்தக சிலிண்டர்களுக்கு அரசு தனித்தனியாக வரி விதிக்கிறது. வீட்டு உபயோக சிலிண்டருக்கு 5% ஜிஎஸ்டியும், வர்த்தக சிலிண்டருக்கு 18% ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது. CTI-யின் கோரிக்கை ஏற்கப்பட்டால், வர்த்தக சிலிண்டர் மீதான வரி நீக்கப்பட்டு, அதன் விலை ரூ.317 வரை குறையும். வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.43 வரை குறையலாம்.
ஏற்கெனவே வைத்த கோரிக்கை
சமீபத்தில், CTI அமைப்பு மத்திய அரசிடம் சமையல் மற்றும் வர்த்தக எரிவாயு மீதான வரி விலக்கு கோரி கோரிக்கை வைத்துள்ளது. ஈரான்-அமெரிக்கா மோதலால் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து, விநியோகத்திலும் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்த சூழலில், வரியை நீக்கினால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைவார்கள், அவர்களின் பணமும் சேமிக்கப்படும் என CTI கூறியுள்ளது.
PNG மீது வாட் வரி விதிப்பதால் விலை அதிகரிப்பு
அரசு தரவுகளின்படி, சமையல் மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்களுக்கு மட்டுமே மத்திய அரசு வரி விதிக்கிறது. இந்த வரி விகிதங்கள் 5% மற்றும் 18% ஆகும். ஆனால், குழாய் மூலம் விநியோகிக்கப்படும் PNG எரிவாயுவை ஜிஎஸ்டி வரம்பிற்கு வெளியே வைத்துள்ளது. இருப்பினும், மாநில அரசுகள் PNG மீது வாட் வரி விதிப்பதால் அதன் விலை அதிகரிக்கிறது. CTI-யின் கோரிக்கை மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

