EPF Interest: 40 வயதில் வேலையை விட்டாலும் 58 வயது வரை வட்டி உண்டா? மாஸ் அப்டேட்!
EPF Interest: ஒருவர் 40 வயதில் வேலையை விட்டாலும் 58 வயது வரை EPF தொகைக்கு வட்டி கிடைக்குமா? இது குறித்த சந்தேகங்களுக்கான பதில்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

40 வயதில் வேலையை விட்டாலும் 58 வயது வரை வட்டி உண்டா?
வேலையை விட்டு விலகியதும் உங்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் வட்டி வருவது நின்றுவிடும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. நீங்கள் 55 வயதுக்கு முன்பாக வேலையை விட்டு நின்றால்கூட, உங்கள் 58 வயது வரை இபிஎஃப் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி தொடர்ந்து வரவு வைக்கப்படும்.
இது தொடர்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனது சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் ஒரு விளக்கத்தை அளித்திருந்தது. இந்த விதிமுறை பல ஊழியர்களுக்கு ஆச்சர்யமளிக்கலாம், ஆனால் இதுதான் நடைமுறையில் உள்ள விதி.
58 வயது வரை வட்டி நிச்சயம்
இபிஎஃப் விதிகளின்படி, ஒரு ஊழியர் 55 வயதை அடைவதற்குள் வேலையை விட்டு விலகினால், அவரது கணக்கு 'செயல்படும் கணக்காகவே' (Operative Account) கருதப்படும். இதன் காரணமாக, அவருக்கு 58 வயது ஆகும் வரை கணக்கில் உள்ள இருப்புத்தொகைக்கு வட்டி தொடர்ந்து கணக்கிடப்பட்டு, வரவு வைக்கப்படும்.
உதாரணமாக, ஒருவர் தனது 40 வயதில் வேலையை விட்டு நின்றாலும், அடுத்த 18 ஆண்டுகளுக்கு, அதாவது அவரது 58 வயது வரை, இபிஎஃப் தொகைக்கு வட்டி கிடைக்கும். 58 வயதை எட்டிய பிறகுதான், அந்தக் கணக்கு 'செயல்படாத கணக்காக' (Inoperative Account) மாற்றப்பட்டு, வட்டி நிறுத்தப்படும்.
55 வயதுக்குப் பிறகு ஓய்வு பெற்றால் என்னவாகும்?
ஒருவேளை, ஊழியர் 55 வயதை எட்டிய பிறகு ஓய்வு பெற்றால், விதிமுறை சற்று மாறுகிறது. அவர் ஓய்வு பெற்ற தேதியிலிருந்து 36 மாதங்கள், அதாவது 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவரது கணக்கு செயல்படாத கணக்காக மாறும். அதுவரை வட்டி தொடர்ந்து கிடைக்கும்.
உதாரணமாக, ஒருவர் தனது 60 வயதில் ஓய்வு பெறுகிறார் என்றால், அவரது கணக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். எனவே, அவருக்கு 63 வயது வரை இபிஎஃப் தொகைக்கு வட்டி வழங்கப்படும். இது பலரும் அறியாத ஒரு முக்கிய விதியாகும்.
முதலாளிகளுக்கான 'விஷ்வாஸ் 2026' திட்டம்
இதனிடையே, மத்திய அரசு முதலாளிகளுக்காக 'விஷ்வாஸ் 2026' (VISHWAS 2026) என்ற ஒருமுறை தீர்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வருங்கால வைப்பு நிதி தொடர்பான சர்ச்சைகளை, குறைக்கப்பட்ட அபராதத்துடன் முடித்துக்கொள்ள இந்தத் திட்டம் உதவுகிறது.
இந்தத் திட்டம் 2026 டிசம்பர் 28 வரை நடைமுறையில் இருக்கும். தாமதமாக பிஎஃப் செலுத்துவதற்கான அபராதம் ஆண்டுக்கு 37% வரை விதிக்கப்படும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் தாமத காலத்தைப் பொறுத்து மாதத்திற்கு 0.25% முதல் 1% வரை மட்டுமே அபராதம் செலுத்தினால் போதும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

