- Home
- Business
- Vande Bharat: வந்தே பாரத் ரயிலில் ஸ்பெஷல் சீட்கள் இனி கிடையாதா? பயணிகளுக்கு ஷாக் கொடுக்கும் ரயில்வே!
Vande Bharat: வந்தே பாரத் ரயிலில் ஸ்பெஷல் சீட்கள் இனி கிடையாதா? பயணிகளுக்கு ஷாக் கொடுக்கும் ரயில்வே!
Vande Bharat: வந்தே பாரத் ரயிலின் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் இருக்கும் ஒரு முக்கிய வசதியை நீக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. வருமானத்தை அதிகரிக்க இந்த முடிவை எடுப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

வந்தே பாரத் ரயிலின் ஸ்பெஷல் சீட் இனி கிடையாதா?
இந்திய ரயில்வேயின் 'கேம் சேஞ்சர்' என அழைக்கப்படுவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். அதிவேக பயணம், தானியங்கி கதவுகள், இன்ஃபோடெயின்மென்ட் திரை, பயோ-டாய்லெட் என விமானம் போன்ற பல வசதிகள் இதில் உள்ளன.
இதனால் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. மற்ற ரயில்களை விட அதிவேகமாக செல்வதாலும், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு முன்கூட்டியே செல்ல முடியும் என்பதாலும் இந்த ரயில்களில் இருக்கைகள் முழுவதும் நிரம்பி இடம் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது.
வந்தே பாரத் ரயிலின் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் உள்ள '360 டிகிரி சுழலும் இருக்கைகள்' பயணிகளை அதிகம் கவர்ந்தன. இப்போது இந்த வசதியை நீக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடந்த ரயில்வே முதன்மை தலைமை மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் மற்றும் கோச் தயாரிப்பு ஆலைகளின் உயர் மட்ட கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. எக்ஸிகியூட்டிவ் கோச்சில் இருந்து இந்த சுழலும் இருக்கைகளை நீக்க இன்ஜினியர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதற்கான காரணங்களை பார்க்கலாம்.
ஸ்பெஷல் சீட்டை நீக்குவதற்கான காரணம்
பழுதாக வாய்ப்பு: பயணிகள் அடிக்கடி இருக்கைகளைச் சுழற்றுவதால், அதன் மெக்கானிக்கல் பாகங்கள் எளிதில் தேய்ந்து பழுதாக வாய்ப்புள்ளது.
பராமரிப்புச் சிக்கல்: சாதாரண இருக்கைகளை விட, சுழலும் இருக்கைகளைப் பராமரிப்பது கடினம் மற்றும் செலவு அதிகம்.
அதிக இடத் தேவை: இருக்கைகள் 360 டிகிரி சுழல்வதற்கு அதிக இடவசதி தேவைப்படுகிறது.
ரயில்வேயின் வருமானம் அதிகரிக்கும்
சுழலும் இருக்கைகளுக்குப் பதிலாக, நிலையான இருக்கைகளைப் பொருத்தினால், அவை நீண்ட காலம் உழைக்கும். மேலும், இருக்கைகளுக்கு இடையிலான தேவையற்ற இடத்தைக் குறைத்து, எக்ஸிகியூட்டிவ் பெட்டியில் கூடுதலாக ஒரு வரிசை இருக்கைகளை சேர்க்க முடியும். இதன் மூலம் ஒவ்வொரு பயணத்திலும் அதிக பயணிகளுக்கு இடம் கிடைக்கும், ரயில்வேயின் வருமானமும் அதிகரிக்கும் என்பது அதிகாரிகளின் வாதம்.
இப்போதுள்ள வந்தே பாரத் ரயில்களில் மாற்றப்படுமா?
இந்த முன்மொழிவை விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு சென்னையின் ஒருங்கிணைந்த ரயில்பெட்டித் தொழிற்சாலைக்கு (ICF) ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு இன்னும் இறுதி ஒப்புதல் கிடைக்கவில்லை. ஒருவேளை இந்த முடிவு அமலுக்கு வந்தால், தற்போது இயங்கும் ரயில்களிலும் இருக்கைகள் மாற்றப்படுமா அல்லது இனி தயாரிக்கப்படும் புதிய வந்தே பாரத் ரயில்களுக்கு மட்டும்தானா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
பயணிகளுக்கு ஏமாற்றம்
வந்தே பாரத் ரயிலின் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் வழியே இயற்கை அழகை ரசிக்க, இந்த சுழலும் இருக்கைகள் மிகவும் வசதியாக இருந்தன. மேலும், குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பயணம் செய்யும்போது, இருக்கைகளை நேருக்கு நேராகத் திருப்பிக்கொண்டு பேசிக்கொண்டே செல்வது ஒரு தனி அனுபவமாக இருந்தது. இந்த வசதி நீக்கப்பட்டால், பிரீமியம் பயண அனுபவம் நிச்சயம் பாதிக்கப்படும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

