- Home
- Business
- ஹோட்டல் ஓனர்களுக்கு குட் நியூஸ்.. மார்ச் 23 முதல் பெரிய மாற்றம்.. மத்திய அரசின் புதிய முடிவு
ஹோட்டல் ஓனர்களுக்கு குட் நியூஸ்.. மார்ச் 23 முதல் பெரிய மாற்றம்.. மத்திய அரசின் புதிய முடிவு
நாடு தழுவிய எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய அரசு வர்த்தக எல்பிஜி விநியோகத்தை 20% அதிகரித்து, மொத்த ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தியுள்ளது. இந்த கூடுதல் சலுகை ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்.

மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
நாடு முழுவதும் நீடித்து வரும் எரிவாயு பற்றாக்குறைக்கு மத்திய அரசின் முக்கிய நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2026 மார்ச் 23 முதல், மாநிலங்களுக்கு வழங்கப்படும் வர்த்தக எல்பிஜி (LPG) விநியோகம் 20% அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த விநியோகம் முன் நிலையின் 50% வரை உயரும். இதனால், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட தாபாக்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு பெரும் நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 23 முதல் எரிவாயு விநியோகம்
இந்த கூடுதல் எரிவாயு முதலில் சில முக்கிய துறைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும். பொதுமக்களுக்கு உணவு வழங்கும் உணவகங்கள், சாலை ஓர தாபாக்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலை கேண்டீன்கள் மற்றும் பால் உள்ளிட்ட உணவு பதப்படுத்தும் யூனிட்கள் இதன் பயனைப் பெறும். அதேசமயம், அரசின் உதவியுடன் செயல்படும் சமுதாய சமையல் மையங்கள் மற்றும் மலிவான கேண்டீன்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள் கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிஎன்ஜி விரிவாக்கம்
முந்தைய நிலையைப் பார்க்கும்போது, எரிவாயு நெருக்கடியின் போது வெறும் 20% மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பின்னர், மார்ச் 18 அன்று வெளியான உத்தரவின் படி, பிஎன்ஜி (Piped Natural Gas) விரிவாக்கம் தொடர்பான சீர்திருத்தங்களை செயல்படுத்திய மாநிலங்களுக்கு கூடுதலாக 10% வழங்கப்பட்டது. தற்போது புதிதாக 20% சேர்த்ததால், மொத்த ஒதுக்கீடு 50% ஆக உயர்ந்துள்ளது.
கட்டாய விதிமுறைகள்
இருப்பினும், இந்த சலுகையைப் பெற சில கட்டாய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து வர்த்தக மற்றும் தொழிற்துறை எல்பிஜி பயனாளர்களும் எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்களில் (OMCs) பதிவு செய்ய வேண்டும். அவர்களின் பயன்பாடு, இடம் மற்றும் ஆண்டு தேவைகள் போன்ற விவரங்கள் முழுமையாக பதிவு செய்யப்பட வேண்டும்.
பிஎன்ஜி இணைப்பு
மேலும் முக்கியமான நிபந்தனை, பிஎன்ஜி இணைப்புக்கு விண்ணப்பிப்பது ஆகும். இந்த கூடுதல் எரிவாயு ஒதுக்கீட்டை பெற, பயனாளர்கள் தங்கள் நகரத்தில் உள்ள பிஎன்ஜி சேவைக்கு விண்ணப்பித்து, தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகளையும் முடிக்க வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் எல்பிஜி மீது சார்பை குறைத்து, பைப் வாயு அதிகரிக்க ஆப் அரசு திட்டமிட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

