E100 Fuel: இனி 100% எத்தனால் கார்கள் வரப்போகிறது.. மத்திய அரசின் அதிரடி முடிவு!
E100 Fuel: 100% எத்தனால் எரிபொருள் (E100) பயன்பாட்டுக்கு மத்திய அரசு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் இறக்குமதி செலவு குறைவதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் பயன்பாடு அதிகரிக்கும்.

நிதின் கட்கரி அறிவிப்பு
இந்தியாவின் எரிபொருள் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கும் வகையில், 100 சதவீத எத்தனால் எரிபொருள் (E100) பயன்பாட்டுக்கு மத்திய அரசு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற சர்க்கரை மற்றும் உயிரி எரிபொருள் மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, E100 எரிபொருளை சட்டப்பூர்வமாக்கும் கோப்பில் கையெழுத்திட்டதாக அறிவித்தார். இது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
வெளிநாட்டு எண்ணெய் சார்பை குறைக்கும் முயற்சி
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் செலவாகிறது. E100 பயன்பாடு அதிகரித்தால், உள்நாட்டில் தயாரிக்கப்படும் உயிரி எரிபொருளுக்கு முக்கியத்துவம் கிடைப்பதுடன், அந்நியச் செலாவணி செலவும் குறைய வாய்ப்புள்ளது.
விவசாயிகளுக்கு புதிய வருமான வாய்ப்பு
கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் மற்றும் பயன்பாடின்றி கிடங்குகளில் தேங்கும் தானியங்கள், இனி எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு நிலையான சந்தை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயிரி எரிபொருள் துறை கிராமப்புற பொருளாதாரத்துக்கும் ஊக்கமளிக்கக்கூடும்.
ஆட்டோமொபைல் துறையின் அடுத்த கட்டம்
ஏற்கனவே E20 எரிபொருள் பயன்பாடு இந்தியாவில் விரிவடைந்து வருகிறது. தற்போது E100-க்கு ஒப்புதல் கிடைத்துள்ளதால், ஃப்ளெக்ஸ் ஃபியூயல் வாகனங்கள் மீது நிறுவனங்கள் அதிக முதலீடு செய்யலாம். மாருதி, டொயோட்டா, ஹூண்டாய், எம்ஜி மற்றும் ஹீரோ போன்ற நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுத்தமான எரிபொருளுக்கான மாற்றமா?
E100 திட்டம் வெறும் தொழில்நுட்ப மாற்றமாக மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாய வளர்ச்சி மற்றும் எரிபொருள் தன்னிறைவு ஆகிய மூன்று முக்கிய இலக்குகளை நோக்கி செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்திய சாலைகளில் இந்த மாற்றம் எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

