- Home
- Astrology
- Astrology: சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?
Astrology: சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள் மற்றும் பிறரின் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

சனி பகவான் வக்ர கதி
ஜோதிடத்தில் "நீதிமான்" என்றும் "கர்ம காரகன்" என்றும் போற்றப்படும் சனி பகவான், நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப பாரபட்சமின்றி பலன்களை வழங்குபவர். அந்த வகையில், வரும் ஜூலை 26 முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பின்னோக்கி பயணிக்கிறார். ஆகையால் ஜூலை 26ம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்போகிறது. அதாவது அடுத்த 138 நாட்களுக்கு நீடிக்கப் போகுகிறது. இந்த வக்ர காலத்தால், சிம்ம ராசி மற்றும் சிம்ம லக்னக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள், அவர்கள் எதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
சிம்ம ராசி
சிம்ம ராசியினருக்கு ஏற்கனவே இருந்த கண்டக சனியின் தாக்கத்தைப் போன்ற ஒரு சூழல் இந்த 138 நாட்களுக்கு மீண்டும் உருவாகிறது. யார் நல்லவர், யார் கெட்டவர், யாரை நம்புவது என்று தெரியாமல் குழப்பம் ஏற்படும். குழப்பமும், தேவையற்ற மாய சிந்தனைகளும் மன அமைதியைக் கெடுக்கலாம். சனி பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களைப் பற்றிப் பிறர் வசைபாடவோ, விமர்சிக்கவோ வாய்ப்புண்டு. யாரிடமும் போய் நியாயம் பேச வேண்டாம்; அமைதியாகக் கடந்து விடுங்கள். சனியின் பார்வை 9-ம் இடத்தில் விழுவதால், கோயிலுக்குச் சென்றால் கூட தரிசனம் சரியாக அமையவில்லை என்ற வருத்தம் வரலாம். பொறுமை அவசியம்.
ஆரோக்கியத்தில் கவனம்
சனி பகவான் 4-ம் இடத்தைப் பார்ப்பதால் உடல் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக, முதியவர்களுக்கு ஜீரணக் கோளாறுகள், மூட்டு வலி மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம். டிசம்பர் மாதம் வரை உணவுப் பழக்கவழக்கங்களில் மிகுந்த கட்டுப்பாடும் எச்சரிக்கையும் தேவை.
தைரியமே உங்களின் ஆயுதம்
சிம்ம ராசியினரே, கடந்த இரண்டரை வருடங்களாகவே நீங்கள் பல்வேறு சவால்களையும் நெருக்கடிகளையும் கடந்து வந்துள்ளீர்கள். உங்களின் அசாத்திய மனவலிமையால் இந்த 138 நாட்களையும் உங்களால் எளிதாகக் கடக்க முடியும். எதற்கும் அவசரப்பட்டு கருத்துச் சொல்ல வேண்டாம். நடப்பதை வேடிக்கை பாருங்கள், மனதிற்கு ஓய்வு கொடுங்கள். பொறுமையே இப்போது உங்களுக்குப் பெரிய பலம்.
வழிபாடும் எளிய பரிகாரங்களும்
உங்கள் வீட்டின் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது மன அமைதியைத் தரும். தினசரி வீட்டில் கந்த சஷ்டி கவசம் கேட்பது அல்லது படிப்பது உங்களுக்குள் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

