Asianet News TamilAsianet News Tamil

பெண்ணை மரத்தில் கட்டி, ஆடைகளைக் கிழித்து, அடி உதை... ஜார்க்கண்டில் நடந்த கொடூர சம்பவம்

பெண்ணைக் கட்டிவைத்து கொடுமை செய்ததாகக் கூறப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

Woman Tied To Tree, Beaten, Her Clothes Torn Off: Jharkhand Cops
Author
First Published Jul 27, 2023, 10:43 PM IST

ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் 26 வயது பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டதாக அந்த மாநில போலீசார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். வியாழன் காலை அந்தப் பெண் காவல்துறையினரால் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை இரவு 11 மணியளவில், மாநிலத் தலைநகர் ராஞ்சியில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாரியா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு நபர்களை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"முதல் கட்ட விசாரணையில் அந்தப் பெண் ஒரு ஆணுடன் தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நபர் மற்ற மூன்று குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து புதன்கிழமை இரவு இந்தக் கொடுமையைச் செய்துள்ளார்" என பகோதர் சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி (SDPO) நௌஷாத் ஆலம் கூறுகிறார்.

நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், தன்னை வீட்டை விட்டு வெளியே வரும்படி அழைத்து வந்ததாகவும் வெளியே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அங்கு இருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வெளியே வந்ததும் அவர்கள் தன்னை வலுக்கட்டாயமாக ஒரு வெறிச்சோடிய இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து தன்  ஆடைகளைக் கிழித்து, மரத்தில் கட்டிவைத்துத் தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios