OTP சொல்லாமல் காரில் ஏறிய மென் பொறியாளரை மனைவி, குழந்தைகள் கண்ணெதிரில் ஓலா டிரைவர் செல்போனால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

OTP சொல்லாமல் காரில் ஏறிய மென் பொறியாளரை மனைவி, குழந்தைகள் கண்ணெதிரில் ஓலா டிரைவர் செல்போனால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மக்கள் தங்களது அவசர தேவைக்காக பெரும்பாலும் ஊபர், ஓலா போன்ற வாகனங்களையே பயன்டுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓலா காரில் பயணித்த இளைஞரை கார் டிரைவர் செல்போனால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி உள்ள கன்னிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் உமேந்தர். கோவையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மின் பொறியாளராக பணியாற்றி வருகிறார். 

சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வெள்ளிக் கிழமை மாலை கன்னிவாக்கம் வந்தார், ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தோட சினிமாவுக்கு சென்றார், இந்நிலையில் மனைவி மற்றும் சகோதரி தனது குழந்தைகள் என மொத்தம் 7 பேர் ஓலா காரில் ஓஎம்ஆர் சாலையிலுள்ள மாலுக்கு சென்றனர். பின்னர் அங்கு படம் பார்த்து முடித்து விட்டு வீடு திரும்ப ஓலா கார் புக் செய்தனர். அப்போது சிறிது நேரத்தில் அவர்களுக்கு கார் வந்தது, அனைவரும் காரில் ஏறினார். அப்போது ஓட்டுநர் ரவி என்பவர் காரில் ஏறுவதற்கு முன்னர் OTP எண் சொல்லவேண்டும், அதை சொல்லாமல் எதற்கு காரில் ஏறினீர்கள் என கேட்டுள்ளார்.

அப்போது மென்பொறியாளர் உமேந்தர் தனது மெசேஜ் பாக்ஸில் OTP எண்ணை தேடினார் அப்போது OTP எண்ணெய் சொல்வதற்கு இவ்வளவு நேரமா என ஓலா டிரைவர் ரவி ஆத்திரம் அடைந்தார். OTP எண் வரவில்லை என்றால் காரைவிட்டு கீழே இறங்குங்கள் என சத்தமாக கூறினார். அதற்கு உமேந்தர் வீட்டுக்கு தானே போகிறோம் போகும் வழியில் சொல்லலாம் என ஏறி விட்டோம் என கூறினார். அப்போது ரவி காரைவிட்டு இறங்குங்கள் என கூற பதிலுக்கு உமேந்தரும் காரில் இருந்து இறங்க முடியாது என கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஒரு கட்டத்தில் உமேந்தர் குடும்பத்தினருடன் காரில் இருந்து இறங்கினார், காரை விட்டு இறங்கும்போது அவர் கார் கதவை வேகமாக சாற்றியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுனர் ரவி, எதற்கு கார் கதவை வேகமாக சாற்றினாய் என கூறி உமேந்தரை தாக்கியுள்ளார். அப்போது ஓட்டுநர் ரவியை உமேந்தரும் பதிலுக்கு கூல்ரிங்ஸ் பாட்டிலால் தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்தரத்தின் உச்சத்திற்கே செல்ல ஓலா டிரைவர் ரவி தன் கையில் வைத்திருந்த செல்போனால் ஓங்கி முகத்தில் தாக்கியுள்ளார் அப்போது செல்போன் நெற்றிப்பொட்டில் பட்டதில் உமேந்தர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.

இதனால் அவரது குடும்பத்தினர் அலறி துடித்தனர் இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்து வந்த பொதுமக்கள் உமேந்தரை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ஓலா டிரைவர் ரவியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதனை அடுத்து உமேந்தர் குடும்பத்தினர் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவியை போலீசார் கைது செய்தனர். 

ரவி சேலம் ஆத்தூர் வாஉசி நகரை சேர்ந்தவர் என்பதும், சென்னையில் ஓலா டிரைவராக இருந்து வருகிறார் என்பதும் விசாரணையில் தெரிந்தது. நிலையில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி குழந்தைகள் உறவினர்கள் கண்ணெதிரில் கணவரை ஓலா டிரைவர் தாக்கி கொலை செய்த சம்பவம் குடும்பத்தினரை நிலைகுலைய செய்துள்ளது. 

கடந்த வாரம் செங்கல்பட்டு அருகே ஓலா டாக்ஸி டிரைவரை வாடிக்கையாளர்கள் போர்வையில் வந்த சில கொள்ளையர்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஓலா நிறுவனம் உயிரிழந்த ஓட்டுனருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் ஐடி ஊழியர் ஒருவரை ஒலா கார் ஓட்டுநர் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் பலர், இனி ஓலா, ஊபர், போன்ற கார் ஓட்டுனர்களை பார்த்தால் பொதுமக்கள் அஞ்சக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்துள்ளனர்.