"நாங்க இனி இருக்கமாட்டோம்.." குழந்தைகளை கொன்று தற்கொலை செய்துகொண்ட 'தாய்' எதற்கு தெரியுமா ?
சேலத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டது ஏன் ? என்பது பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தொடர்ந்து சண்டை :
சேலம் அருகே சின்னவீராணம் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (44). லாரி அதிபர். இவருடைய மனைவி குறிஞ்சி தமிழ் (29). இவர், நேற்று முன்தினம் இரவு தன்னுடைய 2 மகன்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குறிஞ்சி தமிழின் கணவர் ராஜேஷ், மாமியார் முத்தம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே குறிஞ்சி தமிழ், அவருடைய குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குறிஞ்சி தமிழ் தற்கொலை செய்து கொண்டதற்கான உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன.
இதுதான் காரணமா ? :
மாமியார், மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை ராஜேசிடம் கூறும் போது அவர், அதனை பெரிதாக எடுத்து கொள்வதில்லை. நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து ராஜேசிடம் குறிஞ்சி தமிழ் கூறி உள்ளார். அதற்கு அவர் மனைவி மற்றும் தாயை சமாதானப்படுத்தினார். பின்னர் மாலை 5 மணி அளவில் மனைவியிடம் வெளியில் சென்று வருவதாக கூறி உள்ளார்.
அப்போது குறிஞ்சி தமிழ் கணவரிடம், நீங்கள் திரும்பி வரும் போது நானும், குழந்தைகளும் உயிருடன் இருக்கமாட்டோம் என்று உருக்கமாக கூறி உள்ளார். இவ்வளவு விபரீதம் நடக்கும் என்று தெரியாத அவர் அம்மா இனி சண்டை போடமாட்டார் என்று மனைவியை சமாதானம் செய்து விட்டு வெளியில் சென்று விட்டார்.
கணவரின் சமாதானத்தில் திருப்தி அடையாத குறிஞ்சி தமிழ், மகன்களை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர். இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி மற்றும் வீராணம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.