சிறுமி கூட்டு பாலியல் வழக்கு.. இன்ஸ்பெக்டர்,பாஜக பிரமுகர் உள்பட 21 பேர் குற்றவாளிகள்! கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2020ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறுமியின் உறவினர், காவல் ஆய்வாளர், பாஜக பிரமுகர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2020ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் உறுவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி(எ) வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் இரு பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாகி விட்டனர்.
மீதமுள்ள 22 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், மாரீஸ்வரன் என்பவர் விசாரணை கால கட்டத்தின் போது இறந்து விட்டார். மீதமுள்ள 21 பேர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தி, மதன்குமார், ஷகிதா பானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ) அஜய் கண்ணண் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விவரத்தை வரும் 19ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.