போலீசில் போட்டுக்கொடுத்தவரை போட்டுதள்ளிய கும்பல்.. தலைமறைவாக இருந்த 6 பேர் நீதிமன்றத்தில் சரண்..!
கடந்த 11ம் தேதி அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மகனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் வசீம் அக்ரமை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
வாணியம்பாடியில்மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 6 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகரைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம்(42). மனிதநேய ஜனநாயக கட்சியில் மாநில பொறுப்பில் இருந்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மகனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் வசீம் அக்ரமை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று வசீம் அக்ரம் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், காரில் தப்பிச் சென்ற மர்ம நபர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் வசீம் அக்ரம் கொலையில் தொடர்புடைய 2 பேர் சிக்கினர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (எ) ரவி (28) மற்றும் டெல்லிகுமார் (24) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனை குறித்து தகவல் கொடுத்ததால் இம்தியாஸ் என்பவர் சொன்னதின் பேரில் கூலிப்படையை ஏவி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. 2 பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த மற்ற குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவீன்குமார், அஜய், அகஸ்டின், சத்யசீலன், செல்வகுமார், முனீஸ்வரன் ஆகியோர் சரணடைந்துள்ளனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கஞ்சா வியாபாரி இம்தியாஸ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.