1 லட்சம் முதலீடு செய்தால்..1 கோடி வருமானம்.! 'சதுரங்க வேட்டை பாணியில் மோசடி சம்பவம்'
தூத்துக்குடியில் பலரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி 3 கோடி வரை மோசடி செய்த கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சதுரங்க வேட்டை பாணியில் சம்பவம் :
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த திலீபன்ராஜ் மனைவி ஐஸ்வர்யா என்பவரது வாட்ஸ்அப்பிற்கு வந்த லிங்க் மூலம் போலியான முதலீடு நிறுவனத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து பணம் முதலீடு செய்துள்ளார். இதனையடுத்து தனது பணம் திரும்ப வராமல் மோசடி செய்யப்பட்டுள்ளதை அறிந்த ஐஸ்வர்யா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின்பேரில் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் சைபர் குற்ற பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கேரளா பாலக்காடு கரியம்பழா பகுதியை சேர்ந்த முகம்மது சாகிப் உசைன் (25) மற்றும் பாலக்காடு போம்பரா பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் ஜார்ஜ் (25) ஆகிய 2 பேரும் சேர்ந்து ஐஸ்வர்யாவிடம் போலியான முதலீடு நிறுவனத்தின் மூலம் 24, 42, 186/- பணம் மோசடியில் ஈடுபட்டதும், மேலும் இவர்கள் இதுவரை தூத்துக்குடியில் 12 பேரிடம் சுமார் 37 லஞ்சமும் 10 நபர்களின் வங்கி கணக்கை பயன்படுத்தி 3 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
உடனே போலீசார் முகம்மது சாகிப் உசைன் மற்றும் ஜேம்ஸ் ஜார்ஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சதுரங்க வேட்டை கும்பலின் அட்டகாசங்கள் இன்று வரை தொடர்கிறது என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.