பட்டப்பகலில் பயங்கரம்..! நாட்டு வெடிகுண்டு வீசி இருவர் படுகொலை..!
திருவள்ளுர் அருகே இரண்டு இளைஞர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சியைச் சேர்ந்தவர் கோபி(19). இவரது நண்பர் சிவா(20). இவர்கள் இருவரும் இன்று காலையில் ஒரு இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் அடுத்து இருக்கும் பண்ணூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மப்பேடு அருகே வந்து போது இவர்களின் பின்னால் 3 இருசக்கர வாகனத்தில் மர்ம கும்பல் ஒன்று விரட்டி வந்தது.
இருவரையும் மறித்த அக்கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் நாட்டு வெடிகுண்டை வீசியது. இதில் நிலைதடுமாறி கோபியும் சிவாவும் பலத்த காயங்களுடன் கீழே விழுந்தனர். பின் தாங்கள் வைத்திருந்த அருவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் இரண்டு பேரையும் சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மப்பேடு காவலர்கள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.