தலை துண்டித்து திருநங்கை கொடூர கொலை !! தூத்துக்குடியில் பயங்கரம் !!
தூத்துக்குடி அருகே கோவில் பூசாரி ஆவது தொடர்பாக எழுந்த முன்விரோதத்தில் திருநங்கை ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோவில் பூசாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கப்புரத்தை சேர்ந்தவர் அந்தோணி பிச்சை. இவரின் மகன் ராஜாமான்சிங் என்ற ராசாத்தி. திருநங்கையான இவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் , முருகன் தியேட்டர் பகுதியில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.
இந்த கோவிலில் இதற்கு முன்பு தூத்துக்குடி பூபால்ராயர்புரத்தை சேர்ந்த பாண்டி மகன் மருது பூசாரியாக இருந்தார். தற்போது ராசாத்தி பூசாரியாக வந்ததில் இருந்து, அவருக்கும், மருதுவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. மேலும், கோவில் திருவிழா நடத்துவது, தசரா விழா கொண்டாடுவது தொடர்பாகவும் இவர்களுக்கு இடையே மோதல் காணப்பட்டது.
இந்த கோவிலில் விரைவில் கொடை விழா நடக்க இருப்பதால் அதற்கான நன்கொடை வசூல் செய்யும் பணியில் ராசாத்தி ஈடுபட்டு வந்தார். இது மருதுவிற்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து நேற்று மாலையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் முன்பு ராசாத்தி நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பூசாரி மருதுவும், அவரது நண்பர் ஒருவரும் சேர்ந்து ராசாத்தியிடம் தகராறு செய்தனர். இது முற்றவே அவர்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் ராசாத்தியை சரமாரியாக வெட்டினர். திடீரென அவரின் தலையை துண்டித்தனர். பின்னர் அந்த தலையை திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் உள்ள ஒரு கோவில் முன்பு வைத்து விட்டு அந்த 2 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
இந்த கொலை குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மருது மற்றும் அவரின் நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருநங்கை கொடூரமாக கொலை செய்யப்பட்டதை அறிந்த அந்த பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சம்பவ இடத்தில் திரண்டனர்.
அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தலையை துண்டித்து திருநங்கை கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.