டிக்டாக்கிலேயே மூழ்கிக் கிடந்த மனைவி ! ஆத்திரத்தில் பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவன் !!
ஆந்திரா மாநிலத்தில் டிக்டாக்கில் மூழ்கிக் கிடந்த மனைவியை பூரிக்கட்டையால் அடித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்மைக்காலமாக பலரும் தங்களின் இயல்பு வாழ்க்கையை மறந்து சமூக வலைதளங்களில் மூழ்கியுள்ளனர். இது அவர்களுக்கும் அவர்களை சார்ந்த மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் அந்த மாயையில் சிக்குகின்றனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் தல்லூர் கிராமத்தை சேர்ந்த பாச்சூ, டெய்லராக உள்ளார். இவருக்கு பாத்திமா என்ற மனைவியும் பள்ளி செல்லும் வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.
பாத்திமாவுக்கு டிக்டாக்கில் வீடியோ வெளியிடும் பழக்கம் இருந்து வந்தது. வீட்டிற்கு அருகில் உள்ள வயல்வெளி, தோட்டம் என பல்வேறு இடங்களுக்கு சென்று, நடனமாடி வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.
இதனை பலமுறை பாச்சூ கண்டித்தும், பாத்திமா கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், வீட்டில் இருந்த பூரிக்கட்டையால் அடித்தும், கழுத்தை நெரித்தும் மனைவியை கொலை செய்தார்.
பின்னர் மனைவியை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்தது போல் நாடகமாடினார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பாச்சூ கைது செய்யப்பட்டார்.