கோவை ஈஷா ஆதியோகி மையத்திற்கு மங்களூர் ஆட்டோ வெடி குண்டு வழக்கு தீவிரவாதி ஷாரிக் சென்றதாக ஆட்டோ ஓட்டுனர் கூறிய தகவலையடுத்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பை போன்றே கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் வெடித்த குக்கர் வெடிகுண்டு மீண்டும் நாடு முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த இரு நபர்களில் ஒருவரான ஷாரிக் என்பவர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தீக்காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஷாரிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் தமிழகத்தின் சில பகுதிகளுக்கும் கேரளாவிற்கும் சென்று வந்தது இருப்பது தெரிய வந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


மேலும் ஷாரிக் குக்கர் குண்டோடு எடுத்த போட்டோ ஒன்று சமூக வலை தளத்தில் வெளியாகி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே இதே போன்று வெடிகுண்டு சம்பவத்தில் போலீசார் ஷாரிக்கை கைது செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷாரிக்கின் whatsapp முகப்பு பக்க படமாக கோவை ஆதியோகி சிலையின் படம் இருந்தது பரபரப்பு ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து ஈஷா யோகா மையத்திற்கு ஷாரிக் சென்றாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தீபாவளி தினத்தன்று ஷாரிக் போன்ற உருவம் கொண்டவரை கோவை ஈஷா யோகா மையத்திற்கு முன்பாக பார்த்ததாகவும், அவர் தலையில் தொப்பி அணிந்து இருந்ததாகவும் ஈஷா யோகா மையத்தை புகைப்படம் எடுத்தவர் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக டாக்ஸி ஓட்டுநர் ஆனந்த் என்பவர் தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்து வெளியிட்டு இருந்தது.

இந்த தகவலை போலீசார் சிசிடிவி காட்சி மூலமாக உண்மை தன்மையை ஆராய்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் தீபாவளி தினத்தன்று ஷாரிக்கின் தொலைபேசியானது கர்நாடக மாநிலத்தில் இருந்தது போல் காட்டுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்த போதும் ஈஷா யோகா மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.