உயிருடன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பள்ளி மாணவி உயிரிழப்பு... அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெறிச்செயல்..!
விழுப்புரம் அருகே 10ம் வகுப்பு மாணவியை வீட்டில் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி ஜெஸ்ரீ பரிதாபமாக உயரிழந்தார். இது தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக முன்னாள் கவுன்சிலர்களால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ (15). இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் இருந்து புகை வெளியே வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது உடலில் நெருப்புடன் ஜெயஸ்ரீ எரிந்து கொண்டிருந்தார். இதனையடுத்து, தீ அணைக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதில்,மரண வாக்குமூலமாக குடிபோதையில் தன்னை கட்டிப்போட்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தாக விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், உயிருடன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், எங்களுக்குள் ஏற்கெனவே முன்பகை இருந்து வந்தது. அவர்கள் என் மகனை தாக்கினர். அதனால் அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்துவிட்டு அதுகுறித்து புகார் கொடுக்க காவல்நிலையத்துக்கு சென்றேன். அந்த ஆத்திரத்தில் அவர்கள் யாரும் இல்லாத சமயத்தில் என் மகளை இவ்வாறு செய்துவிட்டார்கள் என்று கதறியபடி கூறியுள்ளனர்.