சோகத்தில் முடிந்த சொத்து தகராறு... அண்ணனை சுட்டுக் கொன்ற தம்பி அதிரடியாக கைது...!
சேலத்தில் சொத்து தகராறு காரணமாக அண்ணனை சுட்டுக்கொன்ற தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் உள்ள பெரியபுத்தூரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அங்குள்ள வெள்ளிப் பட்டைறையில் கூலி வேலை செய்து வருகிறார். செல்வத்திற்கு ரேவதி என்ற மனைவியும், இருமகள்கள், ஒரு மகன் உள்ளனர். செல்வத்தின் உடன் பிறந்த தம்பி சந்தோஷ், திருமணமாகாத இவர் தனது தாய் மற்றும் தந்தை ராஜ கவுண்டருடன் அண்ணன் வீட்டிற்கு அருகிலேயே வசித்து வந்தார்.
இந்நிலையில் செல்வத்திற்கும், சந்தோஷுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இன்று காலையும் செல்வம், சந்தோஷ் உடன் சொத்து தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையில் தகராறு முற்றியதை அடுத்து, ஆத்திரமடைந்த சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து செல்வத்தை நோக்கி சுட்டார். இதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
தந்தை ராஜகவுண்டருக்கு சொந்தமான வீட்டு மனை ஒன்றினை பிரித்துக் கொள்வதில் இருவருக்கும் பிரச்சனை நீடித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆத்திரத்தில் அண்ணனை கொலை செய்த தம்பி சந்தோஷ் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர். அப்போது ஆத்தூர் அருகே சந்தோஷ் சுற்றி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். காவலில் எடுக்கப்பட்ட சந்தோஷிடம் அண்ணனைக் கொல்ல காரணம் என்ன? நாட்டுத்துப்பாக்கி எப்படி கிடைத்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.