அடேங்கப்பா… ஆர்.டி.ஓ பாபு வங்கி லாக்கர்ல 13 கிலோ தங்கம்… 32 கிலோ வெள்ளி.. இன்னும்..இன்னும்…அசந்து போன லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்!!
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் கங்கி லாக்கரில் இருந்து 13 கிலோ தங்கம், 32 கிலோ வெள்ளி மற்றும் 10 கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஆச்சரிர்யத்தில் வாயடைத்துப் போயினர்.
கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரைச்சேர்ந்தவர் பாபுஇவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றினார். கடந்த 11-ந்தேதி ஒரு புதிய வாகனத்துக்கு பதிவு சான்றிதழ் வழங்குவதற்காக அவர் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது உதவியாளர் செந்தில்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து கடலூரில் உள்ள பாபுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.30 லட்சத்து 17 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் கைப்பற்றி விழுப்புரம் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
மேலும் அவரது பெயரில் இருந்த 21 வங்கி கணக்குகளையும், அவரது மனைவி மங்கையர்கரசி பெயரில் இருந்த 7 வங்கி லாக்கர்களையும், அவரது உதவியாளர் செந்தில் குமாரின் வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கினார்கள்.
இதைத்தொடர்ந்து கடலூரில் பாபுவின் மனைவி மங்கையர்கரசி பெயரில் 4 வங்கிகளில் இருந்த 7 லாக்கர்களை போலீசார் திறந்து சோதனை நடத்தினார்கள். இதில் கடந்த 19-ந் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்த 3 லாக்கர்களையும், 24-ந் தேதி கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்த 2 லாக்கர்களையும் திறந்து சோதனை நடத்தினார்கள்.
நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பாபுவின் மனைவி மங்கையர்கரசி முன்னிலையில் அவரது பெயரில் இருந்த ஒரு லாக்கரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், காலை 10.30 மணி அளவில் திறந்து சோதனை செய்தனர். இந்த சோதனை மதியம் 1-30 மணிக்கு நிறைவடைந்தது. இதில் 3 கிலோ தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன.
பின்னர் திருப்பாதிரிப்புலியூர் இம்பீரியல் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மங்கையர்கரசி பெயரில் இருந்த லாக்கரை திறந்து சோதனை நடத்தினார்கள். இதில் 700 கிராம் தங்க நகைகள், 12 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் தலா 4 கிராம் எடைகொண்ட 4 ஜோடி வைர கம்மல்கள் வாங்கியதற்கான சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இத்துடன் கடலூரில் 4 வங்கிகளில் பாபுவின் மனைவி பெயரில் இருந்த 7 லாக்கர்களில் நடந்த சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 13 கிலோ தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிக்கட்டிகள், 22 கிலோ வெள்ளி டம்ளர்கள், தட்டுகள், நகைகள், குத்துவிளக்குகள் உள்ளிட்ட பொருட்கள், தலா 4 கிராம் எடை கொண்ட 4 ஜோடி வைர கம்மலுக்கான சீட்டுகள், ரூ.10 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை அந்தந்த வங்கிகளின் லாக்கர்களிலேயே வைத்து பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
இதற்கிடையே வங்கிகளில் பாபுவின் பெயரில் இருக்கும் 21 சேமிப்பு கணக்குகளிலும் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது? என்பதை கணக்கிடும் பணியிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டிலும், லாக்கர்களிலும் இவ்வளயு நகைகளும்இ சொத்து ஆவணங்களும் கிடைத்தது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.