#BREAKING தூத்துக்குடியில் பயங்கரம்.. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி துரைமுருகன் என்கவுண்டர்.!
தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் துரைமுருகன் மீது 7 கொலை வழக்கு உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. தலைமறைவாக இருந்து வந்த துரைமுருகனை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைமுருகன் என்பவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி திருமலையா புரத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் துரைமுருகன் (39). இவர் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த வாரம் தென்காசி நடந்த கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்து வந்த துரைமுருகனை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், முத்தையாபுரம் பொட்டல்காடு பகுதியில் துரைமுருகன் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துரைமுருகனை சுற்றி வளைத்துள்ளனர். அப்போது, போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பமுயன்ற துரைமுருகன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் துரைமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், டவுண் டிஎஸ்பி கணேஷ், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதனையடுத்து, அவரது உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். என்கவுண்டர் சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஸ்ரீபெரும்புதூர் அருகே வட மாநிலத் துப்பாக்கி கொள்ளையர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படை காவலர்கள் கொள்ளையர்களில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.