இறந்து போன கண்டக்டருக்கு 3 நாட்கள் சிகிச்சை அளித்த தனியார் மருத்துவனை… ரமணா படப் பாணியில் பணம் பறித்த கொடுமை !!
தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இறந்து மூன்று நாட்களான அரசுப் பேருந்து கண்டக்டர் ஒருவருக்கு பொய் சொல்லி சிகிச்சை அளித்து பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரமணா பட பாணியில் ஏமாற்றிய மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த கீழஈசனூரைச் சேர்ந்தவர், சேகர். இவர் அரசு பஸ் கண்டக்டராக நாகை பணிமனையில் வேலை செய்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், நாகை வெளிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 7-ந் தேதியில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த 11 ஆம் தேதி சேகரை மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த மருத்துவமனையில் . சிகிச்சைக்காகவும், மருந்து செலவுக்காகவும் ரூ.5½ லட்சம் வரை செலவானது.
மேலும் மருத்துவமனை நிர்வாகம் ரூ.2½ லட்சம் பாக்கி உள்ளது என்றும், அந்த தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என்றும் வற்புறுத்தினர். இதையடுத்து உறவினர்கள், நண்பர்களிடம் ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என வசூலித்து மொத்தம் ரூ.50 ஆயிரம் ரூபாயை அவரது உறவினர்கள் கட்டியுள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்க பணம் இல்லாதால்
நேற்று மதியம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேகர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் சேகர் இறந்து 3 நாட்களாகி விட்டது என்ற தகவலை தெரிவித்தனர்.
இதனைக்கேட்டு அவருடைய குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.இறந்தவரை உயிருடன் இருப்பதாக கூறி பணம் வசூலித்து அந்த தனியார் மருத்துவமனை தங்களை ஏமாற்றி விட்டதே என அவருடைய குடும்பத்தினர் வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து அந்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேகரின் மகன் சுபாஷ், தஞ்சை தெற்கு போலீசில் மாலை புகார் கொடுத்தார். ரமணா படப் பாணியில் இறந்தவருக்க சிகிச்சை அளித்த தனியார் மருத்துவனை பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.