தீவிரவாத தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களை இழிவு படுத்திய ரயில்வே ஊழியர் … பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டதால் அதிர்ச்சி !!
காஷ்மீர் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தபோது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தன.
இதையடுத்து வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் பல இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று லோனாவாலா பகுதியில் சிவாஜி சவுக் என்ற இடத்தில் உள்ளூர் குடியிருப்புவாசிகள் சிலர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.
அப்போது அங்கு வந்த உபேந்திர குமார் பகதூர் சிங் என்பவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷங்களை எழுப்பினார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அவரை அடிக்க முற்பட்டனர். உபேந்திர குமார் ஷிர்விர் பகதூர் சிங், ரெயில்வே துறையில் இளநிலை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். அவரது கோஷம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்ததால் அவரை அடிக்கப் பாய்ந்தனர்.
ஆனால் அங்கு குவிக்கப்பட்டு இருந்த காவல் துறை அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு பிப்ரவரி 18ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து உத்தரவிட்டது நீதிமன்றம்.