காதல் திருமணத்துக்கு உதவி செய்த போலீஸ்காரர் மகன் ! நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி கூறுபோட்ட மர்ம கும்பல் !!
மதுரையில் போலீஸ்காரரின் மகனை ஓட, ஓட விரட்டி நடுரோட்டில் படுகொலை செய்த 8 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
மதுரை கோ.புதூர் விஸ்வநாதநகரை சேர்ந்தவர் பூமிநாதன். போலீஸ்காரராக பணியாற்றி வந்த இவர் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து வாரிசு அடிப்படையில் இவருடைய மனைவி வெங்கடேஸ்வரிக்கு வேலை வழங்கப்பட்டது. அவர் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கிளார்க்காக வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் கோபால்சாமி பட்டதாரி.
நேற்று இரவு 8 மணியளவில் தல்லாகுளம் பெருமாள் கோவில் பின்பகுதியில் உள்ள இடத்தில் நண்பர்களுடன் கோபால்சாமி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் கொண்ட கும்பல் வந்தது.
அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கோபால்சாமி மற்றும் அவருடைய நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இதற்கிடையே அந்த கும்பலை சேர்ந்தவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கோபால்சாமியை தாக்க முயற்சி செய்தனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டிச் சென்றது. பின்னர் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் விழுந்து உயிருக்கு போராடினார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கோபால்சாமியை மீட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் போலீசார் கொலை சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்யப்பட்ட கோபால்சாமி மீது சில வழக்குகள் உள்ளன. மேலும், சில தநாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவருக்கு காதல் திருமணம் செய்து வைத்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகராறில் கொலை நடந்ததா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிற்து.
.மேலும் திருட்டு வாகனங்கள் தொடர்பாக அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. அது தொடர்பான விரோதத்தில் கொலை நடந்ததா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிற்து. நடுரோட்டில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.