'குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்கள், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, கூடுதல் டி.ஜி.பி., ரவி எச்சரித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம். ஆபாச படம் மற்றும் வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் வைத்திருப்பதும், அது தொடர்பான, 'லிங்க்'களை பதிவிறக்கம் செய்வதும் குற்றம் என எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர், தகவல் தொழில் நுட்பம் மற்றும், 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர். இவர்களுக்கு, மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை கிடைக்கும் என்று ரவி தெரிவித்தார்.

அவர்கள், எந்த மாதிரியான வீடியோக்கள் மற்றும் படங்களை பார்த்தனர் என்பதையும் கண்டறிந்துள்ளோம். அவர்களின் புகைப்படம், வீட்டு முகவரி உள்ளிட்ட விபரங்களை, அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள, காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.

குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் படம் பார்த்தவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். மேலும், அவர்களுக்கு, 'கவுன்சிலிங்' அளிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்று ரவி கூறினார்.