முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் மரணத்தில் மறு உடற்கூராய்வு செய்து வீடியோ சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய போலீசார் மேலதூவல் கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் தனது நண்பரான சஞ்சய் உடன் மாலை 4.30 க்கு முதுகுளத்தூர் வந்துள்ளார். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மணிகண்டனின் இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.கல்லூரி மாணவன் மணிகண்டன் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீஸார் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மாணவனை விரட்டிப்பிடித்து போலீஸார் மணிகண்டனை மட்டும் மேலதூவல் கிராமத்திலிருந்து அடித்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து மாலை 6.30 மணிக்கு மணிகண்டனின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கல்லூரி மாணவன் மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்நிலையம் வந்த மாணவனின் பெற்றோர் நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்த மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து சென்றனர். 

வீட்டில் 3 முறை மணிகண்டன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இரவில் தூங்கிய நிலையில் காலை இறந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார். மணிகண்டனின் உடலை உறவினர்கள் சோதித்து பார்த்ததில் ஆண் உறுப்பில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.vஇதையடுத்து போலீஸார் மணிகண்டனை அடித்துக் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டுகின்றனர். மேலும் போலீசார் தரப்பில் இருந்து பாம்பு கடித்து இறந்திருக்கலாம் என விளக்கம் அளித்துள்ள நிலையில் அதை ஏற்க மறுத்த உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். 

மணிகண்டன் வைத்திருந்தது திருடப்பட்ட வாகனம் என்றும், அதைத் திருடிய வேறொரு நபர் மணிகண்டனிடம் குறைந்து விலைக்கு விற்றதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் காவல்நிலையத்தில் மணிகண்டன் இருந்தபோது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சியும் வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும், ‘இந்த விஷயத்தில் எங்கள் மகன் மீது எந்தத் தவறும் இல்லை’ என அவர்களது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், மணிகண்டனின் பெற்றோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தற்போது விசாரணைக்கு வந்தது. அதில், ‘3 மணி நேரம் காவல்துறை கட்டுப்பாட்டில் விசாரணை நடந்துள்ள நிலையில், 2 நிமிட காட்சிதான் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் முழுமையான சிசிடிவி காட்சிகளை வெளியிடவில்லை’ என மனுதாரரான மாணவர் மணிகண்டனின் தாயார் கூறியிருந்தார். மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதி, ‘மாணவர் உடலை மறுகூராய்வு செய்ய வேண்டும். அப்படி செய்கையில், அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.