தம்பியை சரமாரியாக வெட்டிக்கொன்ற அண்ணன்..! குடும்பத்தகராறில் நிகழ்ந்த கொடூரம்..!
மதுரை அருகே உடன்பிறந்த தம்பியை அண்ணனே வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் விளார்சேரியைச் சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு திருமணம் முடிந்து 8 வயதில் மகள் இருக்கிறாள். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாண்டியின் மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார்.
பாண்டி தனது மகள், தாய், மற்றும் சகோதரர் சம்பத்துடன் வசித்து வந்துள்ளார். சகோதரர்கள் இருவரிடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பாண்டியின் மகள் வீட்டில் சிறுநீர் கழித்ததை சம்பத் கண்டித்ததாக தெரிகிறது. அவரது தாயாரையும் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டி, சம்பத்திடம் சண்டையிட்டுள்ளார். பின்னர் வெளியே சென்று மது அருந்தி இருக்கிறார்.
அதிகமான போதையில் வீட்டுக்கு வந்த பாண்டி மீண்டும் சம்பத்திடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி வீட்டில் இருந்த அருவாளை எடுத்த சம்பத்தின் கழுத்து மற்றும் நெற்றியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சம்பத், ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து திருநகர் காவல்நிலையத்தில் பாண்டி சரணடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில் சம்பத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர். கொலை வழக்கு பதியப்பட்டு பாண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.