"நான் சாக போறேன் .. அதுக்கு என் மனைவி குடும்பம் தான் காரணம்" .. - வீடியோ பதிவு செய்து வாலிபர் தற்கொலை முயற்சி ..
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை முயற்சி செய்த வாலிபர் அதற்கு காரணம் தன் மனைவி குடும்பத்தினர் தான் என வீடியோ பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலி கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது அப்பாஸ் (33) . இவரது மனைவி அல்மாஸ்பேகம் (27). இவர்கள் இருவருக்கும் கடந்த 2015 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது .இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்திருக்கிறது . இதுகுறித்து அல்மாஸ்பேகம் தனது தந்தை குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார் .
இதனால் ஆத்திரம் அடைந்த அல்மாஸ்பேகத்தின் சகோதரர்கள் முஹம்மது அப்பாஸை தாக்கியிருக்கிறார்கள் . பின்னர் வரதட்சணை கொடுமை செய்வதாக வடபழனி காவல்நிலையத்தில் முஹம்மது அப்பாஸ் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள் . இதனால் மனமுடைந்து காணப்பட்ட முஹம்மது அப்பாஸ் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் . அவரை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
தற்கொலை முயற்சிக்கு முன்னதாக தனது செல்போனில் வீடியோ ஒன்று பதிவு செய்திருக்கிறார் முஹம்மது அப்பாஸ் . அதில் அவர் கூறியிருப்பதாவது :
இதன் மூலம் போலீசாருக்கு புகார் கொடுக்கிறேன். நான் சாகப்போகிறேன். இதற்கு காரணம் யார்? என்றால் எனது மாமனார், மாமியார், மச்சான் மற்றும் அவருடைய மனைவி ஆகிய 4 பேர் தான் காரணம். நான் வேண்டாம் என்று என் வாழ்க்கையை வீணடித்து விட்டார்கள். நான் சாப்பாடு போடவில்லை என்று கூறுகிறார்கள். 50 பவுன் நகை கேட்டு தொந்தரவு செய்கிறேன் என்று கூறுகிறார்கள். எல்லாம் அல்லாவுக்கு தெரியும். நான் சாகப்போகிறேன். அதற்கு காரணம் இவர்கள் 4 பேர்தான். இதுதான் என்னுடைய வாக்குமூலம்” என்று பேசி இருந்தார்.
இதுகுறித்து விருகம்பாக்கம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .