கோவை மாணவி தற்கொலை – பள்ளி முதல்வர் ஜாமீன் மனு மீது நீதிபதி உத்தரவு…
கோவையை உலுக்கிய பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு கோவை போக்சோ நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.
கோவை சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி , ஆசிரியர் கொடுத்த பாலியல் துன்புறுத்தலால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அக்கடித்தில் யாரையும் சும்மா விடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவி தனது 11 ஆம் வகுப்பு படிப்பை ஆர்.எஸ்.புரத்திலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்துள்ளார். அப்போது அவருக்கு இயற்பியல் ஆசிரியராக வகுப்பு எடுத்த மிதுன் சக்ரவர்த்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். தற்போது12 ஆம் வகுப்பை மாநகராட்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நிலையில், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதனையடுத்து தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி அதிரடியாக போலீசார் கைது செய்தனர். ஆசிரியர் கைது செய்யப்பட்டதையடுத்து, மாணவியின் பெற்றோர் , உறவினர்கள் பள்ளி முதல்வரையும் உடனே கைது செய்ய வேண்டும் எனவும் மாணவி புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கடந்த 14 ஆம் தேதி பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தனிப்படை போலீசாரால் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர், கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் தனிப்படை போலீசாரால் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.
இவ்வழக்கு குறித்து தாமாக முன்வந்து குழந்தை உரிமைகள் நல ஆணையம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து குழந்தைகள் உரிமைகள் நல ஆணைய தலைவி சரஸ்வதி ரெங்கசாமி, உறுப்பினர்கள் மல்லிகை ,ராமராஜ் சரண்யா ஆகியோர் அடங்கிய குழு இச்சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியது.
மேலும் விசாரணையில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவியின் பெற்றோர், மாணவி உடன் பயின்ற மாணவ – மாணவியர், பள்ளி நிர்வாகிகள் , காவல்துறையினர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட மீரா ஜாக்சன்,ஜாமீன் கோரி கோவை போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளது. அதன்படி, வாரந்தோறும் கோவை மேற்கு மகளிர் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகிக், கையெழுத்துயிட வேண்டும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது