கணவனைப் போட்டுத் தள்ளிய கள்ளக் காதலன்… 2 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய மனைவி…
விருதுநகர் அருகே காரியாபட்டியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை அடித்துக் கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரும் கைது செய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலையில் தற்போது துப்பு துலங்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள சத்திரம்புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா . இவரது மனைவி பள்ளப்பட்டியைச் சேர்ந்த முத்துலெட்சுமி . இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இளையராஜா வெளிநாட்டுக்கு சென்று கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு திடீரென மாயமானார்.
இது குறித்து அவரது மனைவி முத்துலெட்சுமி அளித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கில் துப்பு ஏதும் கிடைக்காத நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் திருச்சுழி அருகே உள்ள கம்பாளியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் திருட்டு வழக்கில் போலீசாரிடம் சிக்கினார். இவர் காரியாபட்டியில் இளையராஜாவின் வீட்டருகே வசித்து வருகிறார். மணிகண்டனிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தியபோது அவர் கட்டிட தொழிலாளி இளையராஜாவை கொலை செய்து அவரது உடலை கண்மாயில் புதைத்தது தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் அவரிடம் உரிய முறையில் விசாரணை நடத்தியலில் திடுக் தகவல்கள் கிடைத்தன. கட்டிட தொழிலாளி இளையராஜாவின் மனைவி முத்துலெட்சுமிக்கும், மணிகண்டனுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இளையராஜா வெளிநாட்டில் இருந்து வந்ததும் அவர்களது கள்ளத்தொடர்பு பற்றி அவருக்கு தெரிய வந்தது. இதனால் அவர் முத்துலெட்சுமியை கண்டித்தார்.
கள்ளக்காதலுக்கு இளையராஜா இடையூறாக இருந்து வந்ததால் அவரை கொலை செய்ய முத்துலட்சுமியும் திட்டம் தீட்டினர். இதையடுத்து, கடந்த ஆண்டு ஒரு நாள் இரவு இளையராஜா அவரது வீட்டிற்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் சென்று இளையராஜாவை இரும்புக் கம்பியால் மணிகண்டன் அடித்து படுகொலை செய்தார்.
பின்னர் அவரது உடலை ஒரு சரக்கு வேனில் கொண்டு சென்று கண்மாயில் புதைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து முத்துலெட்சுமியிடம் அவரது கணவர் இளையராஜாவை காணவில்லை என போலீசில் புகார் செய்யக் சொல்லி தெரிவித்துள்ளார். அதன்பிறகுதான் முத்துலட்சுமியும் காரியாபட்டி போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து கண்மாயில் புதைக்கப்பட்ட இளையராஜாவின் உடலை 2 நாட்கள் கழித்து தோண்டி எடுத்து அங்கிருந்த எலும்புக் கூடுகளை வைகை ஆற்றில் வீசியுள்ளனர். தற்போது திருட்டு வழக்கில் போலீசாரிடம் சிக்கியதால் உண்மை வெளிவந்துள்ளது. இதைத் தொடர்ந்து முத்துலட்சுமியும் கைது செய்யப்பட்டுள்ளார்.