சுபஸ்ரீயை இழந்த சோகத்தில் பெற்றோர்... மலையடிவார மல்லிகா ரிசார்ட்டில் மஜாவா? ஜெயகோபால் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை தேடிவந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த போது சுட்டி வளைத்து கைது செய்தது தனிப்படை போலீஸ்.
சென்னை பள்ளிக்கரணையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்கிற இளம் பெண் மீது பேனர் விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிகரணை மற்றும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்த ஹைகோர்ட், விசாரணையை நேர்மையாக நடத்தவும், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது ஏன் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியதைடுத்து, அதுவரை மருத்துவமனையில் நெஞ்சு வலி என கூறி சிகிச்சை பெற்ற ஜெயகோபால் கைது நடவடிக்கைக்கு குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.
ஜெயகோபால் மீதும், பேனர் வைக்க இரும்பு சட்டம் வழங்கிய அவரது உறவினர் மேகநாதன் மீதும் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ததால் கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி நடந்த இந்த விபத்தில் 2 வாரங்களாக தலைமறைவாக இருந்த ஜெயகோபால் தேன்கனிக்கோட்டையில் மலையடிவாரத்தில் மல்லிகா ரிசார்ட்டில் தன் குடும்பத்தோடு தங்கியிருந்த தகவல் கிடைத்ததும், தனிப்படை இன்ஸ்பெக்டர் மகேஷ் நேரடியாக சென்று கைது செய்திருக்கிறார்.
கைது செய்யப்பட்ட ஜெயகோபாலை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்னொரு நபரான ஜெயகோபாலின் உறவினர் மேகநாதனை தேடும் பணியில் தனிப்படை போலீஸார் தொடர்ந்து ஈடுப்பட்டுள்ளனர்.
கேரட்டில் பரபரப்பான வழக்குகள் நடந்து தமிழக அரசும் போலீஸாரும் பதில் சொல்ல முடியாமல் விழித்த நிலையிலும் சுபஸ்ரீ மரணத்துக்கு பேனர் காரணமில்லை என பேட்டி கொடுத்த ஜெயகோபால் ஒகேனக்கல் சென்று அங்கு தலைமைறைவாக இருந்திருக்கிறார். இதெல்லாம் லோக்கல் போலீஸுக்கு தெரிந்தாலும் அரசியல் தலையீடு காரணமாகவே கைது செய்யாமல் இருந்துள்ளனர். மேலும், ஜெயகோபாலை விடச் சொல்லி அரசியல் அழுத்தங்கள் அதிகமான நிலையில், அவரைக் கைது செய்யுமாறு அதைவிட அதிகமாக நீதிமன்ற அழுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து தேன்கனிக்கோட்டையில் மலையடிவாரத்தில் மல்லிகா ரிசார்ட்டில் தன் குடும்பத்தோடு தங்கியிருந்த ஜெயகோபாலை, தனிப்படை இன்ஸ்பெக்டர் மகேஷ் நேரடியாக சென்று கைது செய்திருக்கிறார்.
இதனிடையே, ஜெயகோபால் சிக்கியது எப்படி? ஜெயகோபால் தலைமறைவான போது அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் நெருங்கிய உறவினர்களும் தலைமறைவாகிவிட்டனர். ஜெயகோபாலை தேட திருச்சி, கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட தனிப்படை போலீஸார், அவர்களது செல்போன் நெட்வொர்கை வைத்து தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவரது நண்பரான ஆபிரகாம் என்பவருடன் சென்றிருப்பது தெரியவந்தது. ஆபிரகாமின் செல்போன் நெட்வொர்கை பின் தொடர்ந்த போது தான், தேன்கனிகோட்டை அருகே மல்லிகை பார்ம் ரெசார்ட்டை காட்டியுள்ளது. அங்கு ஜெயகோபால் அவரது மனைவி, மகன் மற்றும் அவரது நண்பர் ஆபிரகாம் குடும்பத்தினர் என 5 பேர் தங்கியிருந்துள்ளனர். ஆனால், வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் தான் இந்த சொகுசு விடுதியில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். அதற்கு முன்பு ஒவ்வொரு நாளாக தங்களுக்கு தெரிந்தவர்களின் ஊர்களுக்கு சென்று ஜெயகோபால் குடும்பத்தினர் தலைமறைவாக சுற்றியுள்ளனர்.