மகள் ஓடிப்போனதால் அவமானம்… ஆத்திரம்… கோபம்… அடித்தே கொன்றோம் … ஓசூர் ஆணவக் கொலையில் தந்தை பகீர் வாக்குமூலம்…
எனது மகள் ஓடி போய் திருமணம் செய்ததால் அவமானம் அடைந்து கணவன் – மனைவி இருவரையும் அடித்து கொன்றோம், என ஓசூர் கலப்பு திருமணம் செய்த தம்பதி ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அந்த பெண்ணின் தந்தை போலீசில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளியில், காதல் கலப்பு திருமணம் செய்த நந்தீஸ் - சுவாதி தம்பதியினர் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வீசப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகிய 3 பேரை கர்நாடக மாநிலம் பெலவாடி போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கொலை குறித்து கைது செய்யப்பட்ட பெண்ணின் தந்தை சீனிவாசன் போலீசில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் எனது மகள் ஓடி போய் திருமணம் செய்ததால் நான் அவமானம் அடைந்தேன். இதனால் நான் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டேன்.
கடந்த 10-ந் தேதி ஓசூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் கமல்ஹாசன் வருவதாக அறிந்தேன். அவரை பார்ப்பதற்காக எப்படியும் நந்தீஸ், சுவாதி வருவார்கள் என அறிந்து கொண்டேன். அதே போல் அவர்கள் இருவரும் அங்கு வந்தனர், அப்போது அங்கு வந்த அவர்களை எனது உறவினர்கள் மூலமாக நைசாக பேசி அழைத்து சென்றேன். பின்னர் ஆத்திரத்தில் இருவரையும் சாகும் வரை அடித்தே கொலை செய்தோம் என தெரிவித்துள்ளார்..
கொலை செய்யப்பட்ட நந்தீஸ் தான் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும், தன்னிடம் இருந்த செல்போன் மூலமாக ஓசூரில் உள்ள முக்கிய நபர் ஒருவருக்கு தகவல் அனுப்பி உள்ளார். அதில் கிட்நாப், நைஸ் ரோடு என்று குறிப்பிட்டுள்ளார். 11-ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் இந்த தகவல் அந்த நபருக்கு சென்றுள்ளது. காலை 6 மணி அளவில் அந்த தகவலை பார்த்த அந்த நபர் நந்தீசின் உறவினர்களுக்கு தெரிவித்தார்.
இதன் பிறகே நந்தீஸ் - சுவாதி தம்பதியை தேடும் பணியை உறவினர்கள் தொடங்கினார்கள். இதன் பிறகுதான் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டது தெரிய வந்தது.