புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு மிருகங்கள் பிடிபட்டுள்ளன, அவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து 1 வாரத்தில் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடலுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்ததராஜன் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்த வந்த தமிழிசைக்கு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தலையும் மீறி ஆளுநர் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறுமிக்கு நடந்த கொடுமையை கேள்விப்பட்டதில் இருந்து தற்போது வரை நான் நிலைகுலைந்து விட்டேன். இங்கு இருக்கும் பெண்களின் மனநிலைதான் ஒரு தாயாக எனக்கும் இருக்கிறது. அதனால் தான் சில பாதுகாப்பு சிக்கல்கள் இருந்தாலும் அவர்களுடன் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நான் இங்கு வந்துள்ளேன்.

நாமக்கல்லில் 10000 போதை மாத்திரைகள் பறிமுதல்; 15 கூலி தொழிலாளர்கள் கைது

குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். விரைவு சிறப்பு நீதிமன்றம் உடனடியாக அமைத்து ஒரு வாரத்திற்குள் குற்றவாளிகள் தண்டிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு நான் உடன்படுகிறேன். ஆனால் சட்டத்தை நாம் கையில் எடுக்க முடியாவிட்டாலும் உணர்வு ரீதியாக அவர்கள் பக்கம் நான் இருக்கிறேன்.

போராட்டம் செய்யும் மக்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். அதைப்போல இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். மக்களோடும், அந்த தாயோடும் நான் உறுதுணையாக இருக்கிறேன். போதைப் பொருள் புழக்கத்திற்கு காரணமாக இருப்பவர்கள் சிலர் அரசியல் பின்புலத்திலும் இருக்கிறார்கள். நிச்சயமாக அனைவரும் பிடிபடுவார்கள். தினமும் போதைப் பொருளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் - அமைச்சர் அறிவிப்பு

தற்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு மிருகங்கள் கைது செய்யப்பட்டுள்ளன. அவர்களை நான் மனிதர்களாகக் கூட மதிக்க வில்லை. அவர்களை நான் மிருகங்களாகத் தான் கருதுகிறேன். சமுதாயத்தில் எங்குமே அது நடக்கக்கூடாது. இந்த குற்றத்திற்கு ஆளானவர்கள் நிச்சயம் எந்த வகையிலும் தப்பிக்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.