ஷாக்கிங் நியூஸ்! சென்னையில் 2 ஆண்டுகளாக ஜோராக நடந்து வந்த கஞ்சா கேக்! அடிமையான மாணவ, மாணவிகள்.. வெளியான பகீர்
தமிழகத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கெட்டு சீரழிந்து வருகின்றனர். இதனை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் கஞ்சா சாக்லேட்டை தொடர்ந்து கஞ்சா கேக் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கெட்டு சீரழிந்து வருகின்றனர். இதனை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழக காவல்துறை சிறப்பு நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்களை கடத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. எச்சரிக்கையும் மீறி போதை பொருள்கள் கடத்துபவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கஞ்சா சாக்லேட் விற்பனையை தொடர்ந்து கஞ்சா கேக் விற்பனை செய்யப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா கேக் விற்பனை அமோகமாக நடப்பதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து, நுங்கம்பாக்கத்தில் ஓட்டல் நடத்தி வரும் விஜய்ரோஷன் டேக்கா, பச்சை குத்தும் நிறுவனம் நடத்தி வந்த தாமஸ் ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் இருந்து கஞ்சா கேக் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன. ஓட்டல் அதிபரான விஜய்ரோஷன் கஞ்சா கலந்த பிறந்தநாள் கேக் உள்ளிட்ட கேக்குகளை கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் விற்பனை செய்து வந்துள்ளார். இந்த கேக்குகளை வாலிபர்கள், இளம்பெண்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஆகியோரும் வாங்கி சாப்பிட்டு வந்துள்ளனர். இந்த கஞ்சா கலந்த கேக்கை, கேக் வியாபாரி ஒருவர் வீட்டில் வைத்து தயாரித்து விஜய ரோஷனுக்கு கொடுத்துள்ளார். வழக்கமாக கேக் தயாரிக்கும் போது உள்ள நடைமுறையை பயன்படுத்தி அதற்கான எசன்ஸ் உள்ளிட்ட பொருட்களில் கஞ்சா பொடியை கரைத்து கஞ்சா கேக் தயாரித்துள்ளார்.
பிறந்தநாள் கேக் விலை ரூ.1000 இருக்கும். ஆனால் அந்த வியாபாரி இந்த கேக்கை 2 மடங்கு விலை வைத்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். விஜய ரோஷன், தாமஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில் கூட்டாளிகள் கார்த்திக், ஆகாஷ், பவன் கல்யாண் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கஞ்சா கேக் தயாரித்து கொடுத்த நபர் தலைமறைவாகியுள்ளார்.