மீன் விற்பனை மோதல்.. பெட்ரோல் குண்டு வீச்சு.. பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல்.. ஊரையே சூறையாடிய கும்பல்..
வாகனத்தை ஓரமாக நிறுத்த சொன்னது தொடர்பாக எழுந்த தகராறில் நள்ளிரவில் மர்ம கும்பல் ஊருக்குள் புகுந்து பெட்ரோல் குண்டு, பயங்கர ஆயுதங்களுடன் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள கந்தப்பக்கோட்டை கிராமத்திற்கு சென்று, பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதித்யன் என்பவர் மின் லாரியில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் மீன் விற்பனை செய்துக்கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த அந்த கிராமத்தை சேர்ந்த கலைவாணன் என்பவர் மினி லாரியை ஓரமாக நிறுத்தி வியாபாரம் செய்யும் படி கூறியுள்ளார். இதில் இருதரப்பு இடையே வாக்குவாதம் முற்றியதில், ஒரு கட்டத்தில் கலைவாணின் இருசக்கர வாகனத்தை ஆதித்யன் தாக்கியதாக சொல்லபடுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கலைவாணனும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து ஆதித்யனின் மின்லாரியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, கந்தப்பக்கோட்டை கிராமத்துக்குள் நூழைந்த 30 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: லிப்ட் கொடுத்து கொலை... பெண்ணின் தங்க செயினை விற்று பைக் வாங்கியவர் கைது...!
மேலும் கிராமத்தில் குடியிருப்புகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அலறியடித்து வீட்டுக்குள் ஓடியுள்ளனர். அப்போது கையில் சிக்கியவர்களை அந்தக் கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டி தாக்கியதில், 5 பேருக்கு பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, கார் ஆகிய வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திவிட்டு, அந்த கும்பல் தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மர்ம கும்பல் வெட்டியதில் காயமடைந்த சுரேஷ் , முத்துக்குமார், விக்னேஸ்வரன் உட்பட 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த திண்டுக்கல் டி.ஐ.ஜி, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ஆகியோர் கிராம மக்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். இதையடுத்து கந்தப்பக்கோட்டை கிராமத்தில் பாதுகாப்பு பணியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிசு செய்த போலீஸார், அதில் 6 பேரை கைது செய்துள்ளனர். ஆதித்யன் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: இதற்காகதான் அதிமுக பிரமுகரை கொடூரமாக கொன்றோம்.. கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்..!