ஜோதிடத்தால் அரங்கேறிய பயங்கரம்... 5 வயது மகனை கதற, கதற எரித்துக் கொன்ற ‘கொடூர’ தந்தை...!
ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையால் சொந்தமகனையே தீயிட்டு கொளுத்திய தந்தையின் செயல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்தவர் ராம்கி, இவருக்கும் எரவாஞ்சேரியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பத்க்கு 5 வயதில் ஒரு மகனும், 3 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் கார்த்தி, ஜோதிடத்தின் மீது அசைக்க முடியாத அபார நம்பிக்கை கொண்டவராம். எந்த ஒரு காரியத்தையும் ஜோதிடர்களுடன் கலந்தாலோசித்தே செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், பல்வேறு ஜோதிடர்களை அவர் சந்தித்து தனது வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட என்ன செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு, ஒரு ஜோதிடர் ராம்கியின் மூத்த மகன் இருக்கும் வரை அவருக்கு வாழ்வில் முன்னேற்றம் இருக்காது என கூறியுள்ளானர். எனவே மூத்த மகனை 15 ஆண்டுகள் ஹாஸ்டலில் தங்க வைக்கப் போவதாக மனைவி காயத்ரியிடம் தெரிவித்துள்ளார்.
இதை ஏற்க மறுத்த காயத்ரி கணவனுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த ராம்கி, மூத்த மகனை வீட்டை விட்டு அனுப்புவது தொடர்பாக மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராம்கி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து 5 வயது மகன் மீது ஊற்றி தீவைத்துள்ளார். காயத்ரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சிறுவனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவீத காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவன், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த நேற்றைய தினமே ராம்கியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தற்போது மன்னார்குடி கிளை சிறையில் அடைத்துள்ளனர். ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையால் சொந்தமகனையே தீயிட்டு கொளுத்திய தந்தையின் செயல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.