வேறு ஒரு நபருடன் தொடர்பு.. சுடுகாட்டுக்கு அழைத்து சென்று கல்லூரி மாணவி கொலை.. காதலன் தம்பி கைது..!
புதுச்சேரியில் கல்லூரி மாணவி கொலைக்கு உடந்தையாக இருந்த காதலனின் தம்பியையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் கல்லூரி மாணவி கொலைக்கு உடந்தையாக இருந்த காதலனின் தம்பியையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி திருக்கனூரை அடுத்துள்ள சந்தைபுதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ராஜஸ்ரீ (17). இவர் சேதராப்பட்டு அருகே உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற ராஜஸ்ரீ பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வில்லியனூர் அருகே உள்ள பொறையூர் பேட் சுடுகாட்டில் மாணவி ராஜஸ்ரீ கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடல் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டு இருந்தது. மாணவி கொலை தொடர்பாக அவரது காதலன் பொறையூர் பேட் பகுதியை சேர்ந்த பிரதிஷை (19) போலீசார் கைது செய்தனர்.
பின்னல், அவரிடம் போலீசில் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அதில், நான் ராஜஸ்ரீயை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். கடந்த ஒரு வாரமாக அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். அவர் வேறு ஒரு வாலிபருடன் பேசி வருவதாக சந்தேகம் அடைந்தேன். எனவே ராஜஸ்ரீயை நேரில் சந்தித்து பேச வருமாறு செல்போன் மூலம் அழைப்பு விடுத்தேன். அதன்படி ராஜஸ்ரீ பொறையூர் பேட் பகுதிக்கு வந்தார். அங்கு எனது தம்பியுடன் நான் காத்து இருந்தேன். ராஜஸ்ரீ அங்கு வந்ததும் அவரை இருசக்கர வாகனத்தில் சுடுகாடு பகுதிக்கு அழைத்து சென்றேன். அப்போது ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என கேட்டேன்.
அப்போது அவர் கல்லூரியில் நண்பர் ஒருவருடன் பேசி வருவதாக தெரிவித்தார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் பீர்பாட்டில் மற்றும் உருட்டுக் கட்டையால் ராஜஸ்ரீயை தாக்கினேன். இதில், அவர் உயிரிழந்தார். பின்னர் எனது தம்பி உதவியுடன் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் வீசி விட்டு வந்து விட்டேன் என அவர் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். கொலைக்கு உடந்தையாக இருந்த பிரதிஷின் தம்பியையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.